பாரதக் கல்வியை மையப்படுத்தி கற்பிக்கும் பாரதிய சிசஷண் மண்டல்

நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை தொடங்கி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த வாரம் ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை பாரதிய பண்புக் கூறுகளின் அடிப்படையில் கற்பிக்கும் பாரதிய சிக்ஷண் மண்டல் பற்றி அறிவோம்…

வரலாற்று பின்னணி

1700-களுக்கு முன்பு வரை, உலகின் மிகவும் செல்வச் செழிப்பான நாடுகளில், பாரதம் ஒன்றாக இருந்தது; உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 25–35% வரை பங்களித்தது, பாரதம்.

இந்த செழிப்பு தற்செயலாக உருவானதல்ல — அது அறிவு, நெறிமுறை, நடைமுறை திறன்களை ஒருங்கிணைத்து வளர்த்த ஒரு வலுவான, கொள்கைமிகுந்த, முழுமையான கல்வி முறையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியின் போது மெக்காலே முன்வைத்த “இந்திய கல்வி சட்டம்” அறிமுகமானபின், பாரம்பரிய கல்வி முறை அழிக்கப்பட்டது.

சிந்தனையாளர்களை உருவாக்குவதற்கு பதிலாக, எழுத்தர் மனப்போக்கு கொண்டவர்களை உருவாக்குவதே புதிய முறையின் நோக்கமாக இருந்தது. இதனால் தலைமுறைகள் தங்கள் மொழி, பண்பு மற்றும் மூலஞானத்திலிருந்து விலக்கப்பட்டனர்.

துரதிர்ஷ்டவசமாக, 1947ல் பாரதம் சுதந்திரம் பெற்ற பிறகும், நமது நாகரிக அடிப்படைக் கொள்கைகளுக்கேற்ப கல்வி அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்கவோ அல்லது சீரமைக்கவோ பெரிய முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அதே காலனித்துவ வடிவமைப்பு தொடர்ந்தது.

உண்மையான தேசியப் புதுக்கட்டமைப்பு பாரதியக் கல்வியை மீண்டும் நிறுவுவதிலிருந்தே தொடங்க வேண்டும் என்பதை கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் தொலைநோக்கு எண்ணம் கொண்டவர்கள் ஆழமாக உணர்ந்தனர் — அதாவது அறிவு, குணம், வாழ்க்கை நோக்கம் ஆகியவற்றை ஒருங்கிணைத்துப் கற்பிக்கும், நித்திய மரபுகள் பிரதிபலிக்கும் கல்வி.

பாரதிய சிக்ஷண் மண்டல் (BSM), 1969-ம் வருடம் ராமநவமி தினமான மார்ச் 27 அன்று, மும்பையில் உள்ள ஸ்ரீராம் மந்த்ரியின் இல்லத்தில், பாளாசாஹேப் தேவரஸ் மற்றும் 25 கல்வியாளர்களின் வழிகாட்டுதலுடன் நிறுவப்பட்டது. அதனால் ராமநவமி தினம், பாரதிய சிக்ஷண் மண்டலின் நிறுவன நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தொலைநோக்கு குறிக்கோள் மற்றும் பணி

பாரதத்தின் மறுமலர்ச்சிக்காக ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை கல்வி முழுவதையும் பாரதிய பண்புக் கூறுகளின் அடிப்படையில், பாரதக் கலாச்சாரத்தின் வேர்களால் போஷிக்கப்பட்டு, பாரதத்தை மையப்படுத்தி அமைப்பதற்காக கொள்கை, பாடத்திட்டம் மற்றும் கல்வி கற்பிக்கும் முறைகள் ஆகியவற்றில் மாற்றம் கொண்டு வருவதற்கு தேவையான ஆராய்ச்சி, விழிப்புணர்வு, பயிற்சி, புத்தகப் பதிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மேற்கொள்வது பாரதிய சிக்ஷண் மண்டலின் குறிக்கோள்.

அமைப்பின் பயணம்

1974 ஆம் ஆண்டு, பாரதிய சிக்ஷண் மண்டல் புனேவில் “நெறிக்கல்வி” தேசிய கருத்தரங்கை ஏற்பாடு செய்தது. இதன் விளைவாக உருவாக்கப்பட்ட நெறிக்கல்வி பாடத்திட்டம், சில மாநிலங்களில் நடைமுறையாக்கப்பட்டது. 1977ல், NCERT நடத்திய கருத்தரங்கில் பங்கேற்று நாட்டின் 10+2+3 கல்வி அமைப்பு உருவாக்குவதில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதே ஆண்டில், நாக்பூரில் “இந்திய கல்விக் கொள்கை” உருவாக்கும் தேசிய திட்டம் தொடங்கப்பட்டது. பாளாசாஹேப் தேவரஸ் மற்றும் பேராசிரியர் ராஜேந்திர சிங் ஆகியோரின் வழிகாட்டுதலுடன், முன்னெடுக்கப்பட்டு, துணை ஜனாதிபதி பி.டி. ஜாட்டி மற்றும் பல தேசிய தலைவர்கள் தலைமை தாங்கிய தில்லி கருத்தரங்கில் உச்சத்தை எட்டியது.

1980ல் தொடங்கப்பட்ட “கல்வியில் இந்தியத்துவம்” என்ற திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 200 கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. 1980ல் புனே மற்றும் 1985ல் பெங்களூரில், அகில பாரதிய பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டு, நூற்றுக்கணக்கான தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டன.

1986ம் ஆண்டின் புதிய கல்விக் கொள்கை விவாதங்களின் போது, நாடு முழுவதும் முன்வைக்கப்பட்ட 12,000 பரிந்துரைகளில், 3,000 பரிந்துரைகள் பாரதிய சிக்ஷண் மண்டலின் பங்களிப்பாக இருந்தன.

1987–89 காலக்கட்டத்தில் நடத்தப்பட்ட ஆறு அம்ச கல்வி சீர்திருத்த திட்டம், நாட்டின் 2,000 இடங்களை சென்றடைந்தது. தத்தோபந்த் தெங்கடி, சுவாமி சின்மயானந்தர், டி.என். சேஷன் போன்ற சிறப்பு சிந்தனையாளர்கள் இத்திட்டத்துக்கு வழிகாட்டினர். 1990களில் பள்ளித் திட்டங்கள், கண்காட்சிகள் மற்றும் 1993ல் “பெண்கள் மன்றம்” உருவாக்கம் மூலம் செயல்பாடுகள் விரிந்தன.

2007ல் விசாகப்பட்டினம் மற்றும் 2012ல் நாக்பூரில் நடைபெற்ற தேசிய மாநாடுகள் “கல்வியில் இந்தியத்துவம்” மற்றும் “நிலைத்த வளர்ச்சிக்கான கல்வி” ஆகிய தலைப்புகளில் கவனம் செலுத்தின.

2005–08 காலத்தில் நடந்த தேசிய அறிவுக் கமிஷனில், பாரதிய சிக்ஷண் மண்டல் தன் பங்களிப்பை வழங்கியது; 36க்கும் மேற்பட்ட கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. 2013ல், 89 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்து கொண்ட தேசிய மாநாட்டை பாரதிய சிக்ஷண் மண்டல் இணைந்து ஏற்பாடு செய்தது.

தொடர்ந்து நடைபெறும் கருத்தரங்குகள், ஆராய்ச்சிகள் மற்றும் சமூக விரிவாக்க முயற்சிகள் மூலம், பாரதம் மையப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தத்தை முன்னெடுத்து வருகிறது.

2024 ஆம் ஆண்டில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தேசிய அளவிலான ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் போட்டியை ஏற்பாடு செய்தது; குருகிராமில் நடைபெற்ற 3 நாள் நிகழ்விற்கு 3,000க்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், குருகுலங்கள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரை நோக்கி பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெளியீடுகள், பாரதிய ஞான பரம்பரை (IKS) மற்றும் கல்வியாளர்களுக்கான கல்வி ஆகிய துறைகளிலும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இம்முயற்சிகளின் மூலம், பாரத்தின் செழுமையான கல்வி மரபை மீண்டும் எழுப்பி, அதன் சொந்த பண்பாட்டு மற்றும் அறிவாற்றல் அடித்தளங்களில் வேரூன்றிய கல்வி அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தையும், அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றன.

464 மாவட்ட அலகுகள், 76,640 தனி உறுப்பினர், 182 நிறுவன உறுப்பினர் மற்றும் 76 பல்கலைக்கழக அலகுகளுடன், பாரதிய சிக்ஷண் மண்டல் நாடெங்கும் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

வடதமிழக செயல்பாடுகள்

வட தமிழ்நாடு பொறுத்தவரை பள்ளித் திட்டம், மகளிர் திட்டம், இளைஞர் பரிமாணம், வெளியீட்டுப் பிரிவு, பாரதிய ஞான பரம்பரை (IKS) ஆகிய துறைகளில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் “கல்வியாளர் சுய ஆய்வு” (Educator Introspection) முன்னணி நிகழ்ச்சியாக திகழ்கிறது. இது உள்ளார்ந்த சிந்தனையை உருவாக்கும் தன்மை கொண்டது; இளம் மனங்களை வடிவமைக்கும் பொறுப்பு எவ்வளவு பெரிது என்பதைக் கல்வியாளர்கள் ஆழமாக உணர உதவுகிறது.

அறக்கல்வித் திட்டம்

போதனை இல்லாமல், பிரசங்கம் இல்லாமல், விரிவுரை இல்லாமல் மாணவர்கள் தாங்களாகவே ஆராய்ந்து, சிந்தித்து, விமர்சித்து புரிந்து கொள்ளும் தனித்துவமான திட்டம் “அறக்கல்வித் திட்டம்”.
குலதேவி திட்டம்
விழிப்புணர்வை உருவாக்கும் முக்கியமான திட்டம். சாதாரண பாடத்திட்டத்தில் பெரும்பாலும் காணப்படாத வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை, மாணவர்கள் அறியச் செய்வதே இதன் நோக்கம். சுவாரஸ்யமான அமர்வுகளின் மூலம், மாணவர்கள் நிதி விழிப்புணர்வு, குடும்பத்தின் மகத்துவம், போதைப்பழக்கத் தடுப்பு, சமூக ஊடகம் மற்றும் இணையத்தள பாதுகாப்பு, தொழில்முனைவு, ஆரோக்கியம் மற்றும் முழுமையான நல்வாழ்வு போன்றவற்றைப் பற்றி கற்று கொடுக்கிறார்கள்.
விஸ்வகர்மா திட்டம்
8ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான, நான்கு ஆண்டுகள் கொண்டதொரு திறன்வளர்ப்பு திட்டம், பல பள்ளிகளில் வெற்றிகரமாக நடந்து வருகிறது. உள்ளூர் தேவைகளுக்கேற்ப பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு, திறமையான, தன்னம்பிக்கை மிக்க, தன்னிறைவு கொண்ட இளம் தொழில்முனைவர்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
மரபு சார்ந்த ஞானத்தையும், நடைமுறைத் திறன்களையும் இணைக்கும் இம்முயற்சிகள் மூலம், மாநிலத்தின் முழுமையான கல்விக்கும், பாரதிய பண்பாடுகளை ஆதாரமாகக் கொண்ட தேச நிர்மாணத்திற்கும் அளிக்கும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன.
கட்டுரையாளர்: பள்ளிக்கூட திட்ட பொறுப்பாளர், வட தமிழ்நாடு