பல பள்ளிகளில் மும்மொழி கல்வி கற்பிப்பு – அரசு கொள்கைக்கு மட்டும் எதிர்ப்பு ஏன்?

தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில், விருப்ப மொழியுடன் சேர்த்து, மும்மொழி கற்பிப்பது நடைமுறையில் உள்ளதால், மத்திய அரசின் மும்மொழி கொள்கையை மட்டும், சிலர் எதிர்ப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள, புதிய கல்வி கொள்கையில், மாநில மொழி மற்றும் ஆங்கிலத்துடன், மூன்றாவதாக ஒரு மொழியை கற்பிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.இந்த மும்மொழி கொள்கைக்கு, பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் சார்பில், மும்மொழி கொள்கையை எதிர்த்து, கண்டன அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தகவல்கள்

ஆனால், தமிழகத்தில் பல பள்ளிகளில், மூன்று மொழிகள் கற்பிக்கப்படுவதாக, புதிய கல்வி கொள்கையை ஆதரிப்பவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.அதிலும், பல அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகளிலும், மூன்று மொழிகளில் பாடங்கள் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் செயல்படும், அரசு பள்ளிகள் சிலவற்றில், பயிற்று மொழியாக உருது, கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்றவை உள்ளன.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், கோவை, தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுார், சேலம், ஈரோடு, கரூர், தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், பிற மொழிகளில் பயிற்றுவிக்கப்படும் பள்ளிகள் உள்ளன.ஆந்திர எல்லையை ஒட்டிய தமிழக பள்ளிகளில், தெலுங்கு; கேரளாவை ஒட்டிய பள்ளிகளில், மலையாளம்; கர்நாடகாவை ஒட்டிய பகுதிகளில் கன்னடமும் பயிற்று மொழியாக உள்ளன. இந்த பகுதிகளில், பிற மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் அதிகம் வசிப்பதால், பிற மொழி பள்ளிகளை அரசே நடத்துகிறது.

கோரிக்கை

அதேபோல, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில், உருது மொழி பேசுவோர் அதிகமாக வசிப்பதால், அவர்களுக்கு ஆங்கிலேயர் காலத்துக்கு முன்பிருந்தே, உருது மொழியில், சில பள்ளிகள் செயல்படுகின்றன.சென்னையில், அரசு உதவி பெறும் பள்ளிகள் சிலவற்றில், உருது, சமஸ்கிருதம், குஜராத்தி, தெலுங்கு மொழிகள் கற்று தரப்படுகின்றன.தனியார் பள்ளிகளில் பல, ஹிந்தி, பிரெஞ்ச், சமஸ்கிருதம், அரபிக், சைனீஸ், ஜெர்மன் மொழிகளை கற்று தருகின்றன.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், தெலுங்கு, 49; உருது, 24; ஹிந்தி, 12; மலையாளம், 4; குஜராத்தி, 4; சமஸ்கிருதம், 5 என, 98 பள்ளிகள் வரை, பிற மொழிகளையும் சேர்த்து கற்று தருகின்றன.இதை கருத்தில் கொண்டு, மத்திய அரசின் மும்மொழி கொள்கையை, எதிர்ப்பதை அரசியல் கட்சிகள் கைவிட்டு விட்டு, தமிழுடன் கூடிய மும்மொழி கொள்கையை அமல்படுத்தவும், ஏற்றுக் கொள்ளவும் முன் வரவேண்டுமென, ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ் இல்லாத கே.வி., பள்ளிகள் தமிழகத்தில் செயல்படும், அனைத்து வகை பள்ளிகளும், 10ம் வகுப்பு வரை தமிழை முதல் மொழியாக, கட்டாய பாடமாக கற்பிக்க வேண்டுமென, 2006ல், அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில், சட்டம் கொண்டு வரப்பட்டது.

இதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், 10ம் வகுப்பு வரை, தமிழ் கட்டாய பாடமாகவும், மற்ற மொழிகள் விருப்ப பாடங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. இந்த உத்தரவை, தமிழக பள்ளிக்கல்வி, சி.பி.எஸ்.இ., – ஐ.சி.எஸ்.இ., – ஐ.பி., பாட திட்ட பள்ளிகள் பின்பற்றுகின்றன.ஆனால், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள, பல கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், தமிழை கற்று தருவதில்லை. சில பள்ளிகள் மட்டுமே, பெற்றோரின் விருப்பத்தை கேட்டு, தமிழ் மொழியை கற்று தருகின்றன.எனவே, அவற்றிலும் தமிழை கட்டாய மொழியாக்கி, மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.