‘பசு கோமியம் மாநிலங்கள்’ சர்ச்சை பேச்சு: மக்களவையில் மன்னிப்பு கேட்டார் திமுக எம்.பி. செந்தில்குமார்

மக்களவையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு தருமபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார் பேசியதாவது:

பசு கோமிய மாநிலங்கள் (`கோ மூத்ரா’ மாநிலங்கள்) என்று நாம் பொதுவாக அழைக்கும் ஹிந்தி பேசும் மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் மட்டுமே பாஜக வெற்றி பெறுகிறது. இதுவே பாஜகவின் பலம். ஆனால் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானாவில் நடைபெறும் தேர்தலில் அந்தக் கட்சியால் வெற்றி பெற முடிவதில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்தி பேசும் மாநிலங்களை ‘கோ மூத்திர மாநிலங்கள்’ என்றுஎம்.பி. செந்தில்குமார் குறிப்பிடுவது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 2022-ல் மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போதும், இதுபோன்று எம்.பி. செந்தில்குமார் பேசினார்.

தேசியக் கல்விக்கொள்கை தொடர்பான விவாதத்தில் அவர் பேசும்போது இந்தி பேசும் மாநிலங்களை கோ மூத்திரமாநிலங்கள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். தற்போது கோ மூத்திர மாநிலங்கள் என்று திமுக எம்.பி. செந்தில்குமார் பேசியிருப்பது சர்ச்சையையும், விவாதத்தையும் எழுப்பியுள்ளது. அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதை பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக எம்.பி.யின் பேச்சுக்குதமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் தமது பேச்சுக்குதிமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் மன்னிப்பு கேட்டு எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பதிவிட் டுள்ளதாவது: நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டப் பேரவைத்தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள்அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன். எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை,

அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திரும்ப பெறுகிறேன்: இந்நிலையில், தனது கருத்துக்கு மக்களவையிலும் அவர் நேற்று மன்னிப்பு கேட்டார். தனது கருத்தை வாபஸ் பெறுவதாகவும் அவர் கூறினார்.

கவனக்குறைவாக நான் வெளியிட்ட அறிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்களின்உணர்வுகளை புண்படுத்தி இருந்தால் அதை நாம் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். அந்த வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று மக்களவையில் திமுக எம்.பி. செந்தில்குமார் நேற்று தெரிவித்தார்.