நினைத்ததை சாதித்த பாஜக

மேற்கு வங்கத்தில் மோசமான சட்டம் ஒழுங்கு நிலை, பாஜக, ஹிந்து அமைப்புகள் மீதான தாக்குதல், வேலைவாய்ப்பின்மை போன்றவை அதிகரித்துள்ளன. இதை எதிர்த்து, பாஜகவின் இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா ‘தலைமை செயலக முற்றுகை போராட்டம்’ அறிவித்திருந்தார்.

பல்லாயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என்பதால் கலவரமடைந்தார் மம்தா பேனர்ஜி. சுத்திகரிப்பு என காரணம் சொல்லி தலைமை செயலகம் இரண்டு நாட்கள் மூடப்பட்டது. செயலகத்தை சுற்றியுள்ள சாலைகளும் அடைக்கப்பட்டன. அந்த இடங்களை காவலர்களுடன் இணைந்து மம்தாவின் கட்சி குண்டர்களும் காவல் காத்தனர்.

ஆனால் இவ்வளவு முன்னேற்பாடுகளையும் தாண்டி திட்டமிட்டப்படி முற்றுகையை நிறைவேற்றியுள்ளனர் பாஜகவினர். மம்தாவின் இந்த நடவடிக்கைகளை பாஜகவினருக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை.

ஆனால் அவர்கள் மம்தாவுக்கு ஒரு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளனர். சாலைகள் மூடப்பட்டதால் அவர்கள் நதியில் படகுகள் மூலமாக முன்னேறினர். மம்தா, காவல்துறை, திரிணாமுல் அடியாட்கள் என யாரும் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

தங்கள் திட்டம் தவிடுபொடியானதால் கோபமடைந்த திரிணாமுல் கட்சியினர் படகில் வந்தவர்கள், சாலை வழியாக வந்தவர்கள் என அனைவர் மீதும் போலீசாரின் எதிரிலேயே நாட்டு வெடிகுண்டுகள், கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர்.

போலீசார் இதை பாஜகவினர் செய்தனர் என திரித்து கூறி பாஜகவினர் மீது கண்ணீர் புகைகுண்டு, தடியடி நடத்தியுள்ளனர்.

பாஜகவின் அமைதியான முற்றுகை போராட்டத்தை கலைக்க அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதை வைத்தே மம்தாவின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதிப்பின் அளவை தெரிந்துகொள்ளலாம்.