நாய்களை கொன்று கோயிலில் கொள்ளை

பீகார் மாநிலம் கைமூர் பகுதியில் உள்ள ஒரு காளி கோயிலில் கொள்ளையடிப்பதற்காக வந்த திருடர்கள், அந்தத் தெருவில் உள்ள ஏழு நாய்களுக்கு விஷம் கொடுத்துக் கொன்றனர். அதைத் தொடர்ந்து கோயில் கதவை உடைத்து உள்ளே சென்று உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.15,000 பணத்தை திருடிச் சென்றனர். இச்சம்பவம் அங்கு வாழும் மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நாய்கள் கோயிலில் ஆரத்தி போன்ற தினசரி சடங்குகளின் போது தவறாமல் கோயிலுக்கு வந்து செல்லும். இங்குள்ளவர்கள் அதற்கு பிரசாதமும் உணவும் அளிப்பார்கள். வெளியாட்கள் வருவதைக் கண்டால் குரைத்து எச்சரிக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். கோயில் அறங்காவலர் குழுவும் பொதுமக்களும் காவல்துறை இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.