தோட்டாக்கள், வெடிகுண்டுகளைக் காட்டிலும் வளர்ச்சி வலிமையானது – பிரதமர் மோடி பேச்சு

கடந்த முறை ஆட்சியில் இருந்த போது ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழையும் “மன் கி பாத்” வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார். பிரதமர் மோடி இன்றைய நிகழ்ச்சியில் காஷ்மீரில் வளர்ச்சி, சந்திரயான்-2 செயற்கைக்கோள், சுதந்திர தினம், உள்ளிட்ட விஷயங்கள் குறித்துப் பேசினார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத நடவடிக்கைகள் குறைந்து, கடந்த ஜுன் மாதத்தில் இருந்து எல்லையோரத்தில் வசிக்கும்  மக்கள் தங்கள் சொந்த கிராமத்துக்கு ஆர்வத்துடன் திரும்பி வருகிறார்கள். அவர்களுக்கு துணையாக இருக்கும் அதிகாரிகள் அவர்களுடன் ஆலோசித்து தேவையான வளர்ச்சித் திட்டங்களை செய்து வருகிறார்கள்.

மக்களின் ஆர்வத்தைப் பார்க்கும்போது, வளர்ச்சிப் பாதைக்கு வருவதற்கு ஆசையுடன் இருப்பதை காட்டுகிறது, மக்கள் நல்ல சிறந்த நிர்வாகத்தை எதிர்பார்க்கிறார்கள், அதில் பங்குபெறவும் விரும்புகிறார்கள். இதன்மூலம், துப்பாக்கி தோட்டாக்கள், வெடிகுண்டுகளைக் காட்டிலும் வளர்ச்சியும், மேம்பாடும் வலிமையானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சிப் பாதைகளை வெறுப்பு எனும் தடைகளை உருவாக்க நினைப்பவர்கள், பரப்புப விரும்புபவர்கள் ஒருபோதும் வெற்றி பெற இயலாது என்பது தெளிவாகத் தெரிகிறது.முதல்முறையாக 4500 பஞ்சாயத்துகளில், எதிரிகளின் துப்பாக்கி குண்டுகள் பாயும் இடங்களில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கே சென்று  மூத்த அதிகாரிகள் மக்களுடன் பேசி தேவையை அறிந்து வருகின்றனர்.சோபியான், புல்வாமா, குல்கம், ஆனந்த்நாக் மாவட்டங்களில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம் இருந்த நிலையில், இப்போது மக்கள் அச்சமில்லாமல் வசிக்கிறார்கள்.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய நமது விஞ்ஞானிகள் வெற்றிகரமாக சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளனர். சந்திரயான-2 விண்கலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் நிலவில் லாண்டர்  விக்ரம் தரையிறங்குவதையும், ரோவர் பிரக்யான் ஆய்வு செய்வதையும் ஆவலுடன் பார்த்திருக்கிறோம். இதன் மூலம் நிலவைப் பற்றி ஆழமாக நாம் அறிய முடியும்.