திருவெம்பாவை – 9

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து சொன்ன பரிசே
தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையே
எமக்கெங்கோன் நல்குதியேல் என்ன குறையும்
இலோமேலோ ரெம்பாவாய்.

விளக்கம் :

துயில் கொண்டிருந்த கன்னியர் அத்தனை பேரும் எழுந்து விட்டனர். அனைவரும் ஒன்றாக கூடி நீராடி ஒருநிலை மனத்துடன் தலைவனான சிவபெருமானை புகழ்ந்து பாடுகின்றனர்.

பழமைக்கும் பழமையானவனே! புதுமைக்கும் புதுமையானவனே! உன்னைத் தலைவனாகப் பெற்றோம். உன் சிறப்பு மிக்க அடியவர்களாகிய நாங்கள் உன்னைத்துதிப்போம் உன் தொண்டர்களாகிய சிவனடியார்களின் திருவடிகளை வணங்குவோம். அவர்களோடு தோழமை கொள்ள விழைவோம். சிவனடியார்களே எங்களுக்கு இல்லத் துணைவர்களாக வரவேண்டும். அவர்கள் விரும்பிக் கட்டளையிட்ட வண்ணமே, அவர்களுக்கு த் தோழமையாய்
நின்று ஏவல் செய்வோம். எங்கள் பெருமானே! இவ்வாறு கிடைக்குமாறு எங்களுக்கு நீவிர் அருள் புரிய வேண்டும். இதனால் நாங்கள் எந்த குறையும் இல்லாதவர்களாய் இருப்போம் என்று மனம் உருகிப் பாடி கன்னியர்கள் பாவை நோன்பு மேற்கொள்கின்றனர்.