திருப்பாவை 21

கறக்கும் பொழுதெல்லாம், அமுதக் கலன்கள் பொங்கி  நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக்களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே! கண்ணனே! வேதங்களால் போற்றப் படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக! உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக. துயில் எழுவாயாக. மன்னாதி மன்னர்களெல்லாம் உன் காலில் விழ காத்துக் கிடப்பது உன்னிடமுள்ள பயத்தால்! ஆனால், நாங்கள் அவர்களைப்போல பயந்த சுபாவம் உள்ளவர்கள் என நினைத்தாயோ, நாங்கள் வா என்று அழைத்தால் நீ வந்தாக வேண்டும். வர மறுத்தால், எங்கள் அன்பென்னும் கயிற்றால் உன்னைக் கட்டிப் போட்டு விடுவோம். அப்போது, நீ எங்களிடமிருந்து தப்பவே முடியாது என்கிறார்கள். இதுதான் பக்தியின் உச்சநிலை. அச்சுதனிடம் நம்மை அர்ப்பணித்து விட்டால், அவன் நம்மிடமிருந்து தப்பி ஓடமுடியாது என்பது இப்பாசுரத்தில் உட்கருத்து.