தவறை திருத்தவே குடியுரிமை சட்டம் – என்.சி.சி., பேரணியில் பிரதமர்

‘வரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதிகளைச் சரி செய்யவும், பழமையான வாக்குறுதியை நிறைவேற்றவும் தான், சி.ஏ.ஏ., எனப்படும், குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

டில்லியில் நேற்று நடந்த, என்.சி.சி., எனப்படும், தேசிய மாணவர் படையின் பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார். என்.சி.சி. மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, பிரதமர் மோடி பேசியதாவது:நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து, ஜம்மு – காஷ்மீரில் பிரச்னை நீடித்து வருகிறது. அரசியலில் உள்ள சில குடும்பங்களும், சில கட்சிகளும் சேர்ந்து, இந்த விவகாரத்தை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என நினைத்து, அதைத் தீர்க்க முனைப்பு காட்டவில்லை. இதனால், அங்கு பயங்கரவாதம் அதிகரித்தது. ஆயிரகணக்கான அப்பாவிகள் உயிரிழந்தனர். பலர், வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். நம் அண்டை நாடு, போரில் நம்மிடம், மூன்று முறை தோற்றுள்ளது. அந்நாட்டைதோற்கடிக்க, நம் முப்படைகளுக்கு, 10- – 12 நாட்களுக்கு மேல் தேவைப்படாது. இதனால் தான், அவர்கள் பல ஆண்டுகளாக, நமக்கு எதிராக மறைமுக போரை நடத்தி வருகின்றனர். ஆனால், மத்தியில் ஆட்சிக்கு வந்த, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, நூற்றாண்டு காலமாக நீடித்து வந்த இந்தப் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அண்டை நாட்டின் மறைமுகப் போரை, இதற்கு முன்பு இருந்த அரசுகள், சட்டம், ஒழுங்கு பிரச்னையாக மட்டுமே பார்த்தன. தகுந்த பதிலடி கொடுக்க, நம் ராணுவத்தினருக்கு அனுமதி கொடுக்கவில்லை.ஆனால், இப்போது, அண்டை நாட்டின் மறைமுக போருக்கு பதிலடி கொடுக்க, ராணுவத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசு, ஜம்மு – காஷ்மீரில் மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைதியான சூழலை, கொண்டு வந்துள்ளது. பல ஆண்டுகளாக நீடித்து வந்த, வடகிழக்கு மாநில மக்களின் ஆசைகள், எண்ணங்களை பேச்சுவார்த்தையின் மூலம், இந்த அரசு தீர்த்து வைத்துள்ளது.போடோ ஒப்பந்தம், முத்தலாக் தடை, ஜம்மு – காஷ்மீரில், 370-வது பிரிவு ரத்து உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாதனைகளை, இந்த அரசு செய்துள்ளது.வரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதிகளைச் சரிசெய்யவே, குடியுரிமைத் திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டது. சுதந்திரத்துக்கு முன், நாட்டின் பிரிவினையின்போது அநீதி இழைக்கப்பட்டது. நேரு – -லியாகத் அலி கான் இடையே நடந்த ஒப்பந்தத்தில், இரு நாடுகளில் இருக்கும் சிறுபான்மை மக்களைப் பாதுகாக்க முடிவு செய்யப்பட்டது. இதை மஹாத்மா காந்தியும் விரும்பினார்.ஆனால், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பேசும் சில அரசியல் கட்சிகள், வாக்கு வங்கி அரசியலை நடத்துகின்றன. பாகிஸ்தானில் மதரீதியாகத் துன்புறுத்தப்பட்டு, இந்தியாவுக்கு அடைக்கலமாக வந்தவர்கள், பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் தான். நம் அரசின் முடிவுகள் குறித்துப் பரப்பி விடப்படும் தவறான பிரசாரத்தால், சர்வதேச அளவில், தேசத்தின் மதிப்புக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. நான், என்னுடைய கவுரவத்துக்காக உழைக்கவில்லை. தேசத்தின் கவுரவத்துக்காக உழைக்கிறேன்.இவ்வாறு, மோடி பேசினார்.

தானிய உற்பத்தியில் இந்தியா முதலிடம். குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள காந்திநகரில், மூன்றாவது உலக உருளைக்கிழங்கு மாநாடு நடக்கிறது. மாநாட்டில், வீடியோகான்பரன்சிங் வழியாக, பிரதமர் மோடி நேற்று பேசினார். அவர் பேசியதாவது:உணவு தானியங்கள் மற்றும் உணவு பொருட்கள் உற்பத்தியில், சர்வதேச அளவில், இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு, விவசாயிகளின் கடின உழைப்பும், அரசின் கொள்கைகளும் தான் காரணம்.நாட்டில், உருளைக்கிழங்கு உற்பத்தி, 10 ஆண்டுகளில், 20 சதவீதம் அதிகரித்துள்ளது. குஜராத்தில் மட்டும், 170 சதவீதம் அதிகரித்துள்ளது. 20 ஆண்டுகளில், உருளைக்கிழங்கு உற்பத்தி மையமாக குஜராத் மாறியுள்ளது. விவசாயம் சார்ந்த கொள்கை முடிவுகள், பாசனத்துக்கான நவீன வசதிகள் ஆகியவை தான் இதற்கு காரணம். நாட்டில், 6 கோடி விவசாயிகளின் வங்கிகணக்குகளில், இந்த மாத துவக்கத்தில், 12 ஆயிரம் கோடி ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டு, சாதனை படைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை, 2022க்குள், இரு மடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், பாசனம் மற்றம் விவசாயம் தொடர்பான உள்கட்டமைப்புகளுக்கு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழிக்கப்பட உள்ளது. விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கு இடையே உள்ள துாரத்தை குறைப்பது தான் அரசின் முக்கிய நோக்கம். இவ்வாறு, பிரமதர் மோடி பேசினார்.