தலைக்கு மதிப்பு

அசோக சக்கரவர்த்தி தன் ரதத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது எதிரே ஒரு புத்தத்துறவி வந்து கொண்டிருப்பதைக் கவனித்ததும் ரதத்திலிருந்து இறங்கி வந்து அவர் காலில் விழுந்து வணங்கினார். அதைக் கவனித்த அவரது தளபதிக்கு, மாமன்னர் ஒரு பரதேசியின் காலில் விழுவதா என்று வருத்தம் ஏற்பட்டது. அதை அரண்மனைக்கு வந்ததும் மன்னரிடமே வெளிப்படுத்தினார். மன்னரோ அவரது வினாவுக்கு விடையளிக்காமல், ஒரு ஆட்டுத்தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத்தலை மூன்றும் கொண்டுவர ஆணையிட்டார்.
மூன்று தலைகளும் கொண்டு வரப்பட்டன. மன்னர் மூன்றையும் சந்தையில் விற்று வரச்சொன்னார். ஆட்டுத்தலை உடனே விலை போயிற்று. புலித்தலையை வாங்கப் பலரும் யோசித்தனர். இறுதியில் ஒரு வேட்டைக்காரர் தன் வீட்டு சுவற்றில் பாடம் பண்ணி தொங்கவிட வாங்கிச் சென்றார். ஆனால் மனிதத் தலையைக் கண்டு எல்லோரும் அஞ்சிப் பின் வாங்கினர். முகம் சுளித்தனர். ஒரு காசுக்குக் கூட யாரும் வாங்க முன்வரவில்லை. விபரங்களை மன்னரிடம் சொன்னபோது, மனிதத் தலையை யாருக்காவது இலவசமாகக் கொடுத்துவிட சொன்னார். இலவசமாக வாங்கக் கூட யாரும் தயாராயில்லை. இப்போது அசோகர்,”தளபதியே, மனிதன் இறந்து விட்டால் அவன் உடல் ஒரு காசுகூடப் பெறாது. இருந்தும் இந்த உடல், உயிர் உள்ளபோது என்ன ஆட்டம் போடுகிறது? இறந்த பிறகுதான் நமக்கு மதிப்பில்லை என்பது நமக்கு தெரிகிறது. உடலில் உயிர் இருக்கும்போதே, தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் ஞானிகள். அத்தகைய ஞானிகளை பாதத்தில் விழுந்து வணங்குவதில் என்ன தவறு இருக்க முடியும்?” என்றார். தளபதிக்கு இப்போது எல்லாம் புரிந்தது.
ஜே. மோகன், கொளத்தூர்