தமிழகத்தில் 69.46% மட்டுமே ஓட்டுப்பதிவு: நள்ளிரவில் மாற்றிய தேர்தல் கமிஷன்

லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் 72.09 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருப்பதாக நேற்று மாலை அறிவித்த தேர்தல் கமிஷன், நள்ளிரவில் அதை 69.46 சதவீதம் என மாற்றி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் நேற்று ஓட்டு பதிவு நடந்தது. காலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு, அமைதியான முறையில் நடந்து முடிந்தது. சில இடங்களில் ஓட்டு இயந்திரம் பழுதடைந்ததாக புகார் எழுந்தது; அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டன. சலசலப்புகள், வாக்குவாதங்கள் தவிர்த்து அசம்பாவிதம் ஏதுமின்றி தேர்தல் நடந்து முடிந்தது. இரவு 7:00 மணிக்கு 72:09 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்ததாக, தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்நிலையில் நள்ளிரவில் அதனை மாற்றி, 69.46 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவானதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக, தர்மபுரியில் 81.48% ஓட்டுகள் பதிவாகி உள்ளது. மத்திய சென்னையில் குறைந்தபட்சமாக 53.91% ஓட்டுகள் பதிவாகி உள்ளது. லோக்சபா தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் 78% ஓட்டுப்பதிவு நடந்துள்ளதாகவும், விளவங்கோடு இடைத்தேர்தலில் 65.40% ஓட்டுப்பதிவு நடந்துள்ளதாகவும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.