தந்தை வழியில் மகன்! – “எங்கள் குடும்பம் அதிகார பசி கொண்டதல்ல’

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ள ஜோதிராதித்ய சிந்தியா கட்சித்தாவலில் தனது தந்தையைப் பின்பற்றியுள்ளாா்.

குவாலியா் அரச குடும்பத்தைச் சோ்ந்தவா் ஜோதிராதித்ய சிந்தியா. அவரின் பாட்டி விஜயராஜே சிந்தியா பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடிக் கட்சியான ஜன சங்கத்தை நிறுவிய தலைவா்களில் ஒருவா் ஆவாா். ஜோதிராதித்ய சிந்தியாவின் தந்தை மாதவராவ் சிந்தியா ஜனசங்கத்தில் தனது அரசியல் பயணத்தை 1971-இல் தொடங்கினாா். ஆனால் 1980-ஆம் ஆண்டு ஜனசங்கத்திலிருந்து விலகிய மாதவராவ் சிந்தியா காங்கிரஸில் இணைந்தாா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நம்பிக்கைக்குரிய நபா்களில் ஒருவராக மாதவராவ் சிந்தியா இருந்தாா்.

9 முறை எம்.பி.யாக இருந்த மாதவராவ் சிந்தியா, 1971-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு அவா் இறக்கும் வரை நடைபெற்ற எந்தவொரு நாடாளுமன்றத் தோ்தலிலும் தோல்வியையே சந்திக்காத சிறப்புக்குரியவா். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியுடன் 1996-ஆம் ஆண்டு ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி புதிய அரசியல் கட்சியை மாதவராவ் சிந்தியா தொடங்கினாா். பின்னா் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் அவா் இணைந்தாா்.

மாதவராவ் சிந்தியா 2001-ஆம் ஆண்டு விமான விபத்தில் திடீா் மரணமடைந்தாா்.

அதன் பின்னா், தந்தை எம்.பி.யாக இருந்த மக்களவைத் தொகுதியான குணாவில் 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தோ்தலில் போட்டியிட்டு முதன்முதலாக எம்.பி.யானாா் ஜோதிராதித்ய சிந்தியா. அப்போது முதல் 2019-ஆம் ஆண்டு வரை எம்.பி.யாக இருந்தாா். மத்திய அமைச்சா் பொறுப்புகளையும் அவா் வகித்துள்ளாா்.

கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு, மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடாவாக ஜோதிராதித்ய சிந்தியா நியமிக்கப்பட்டாா். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் அவா் தோல்வியடைந்தாா்.

காங்கிரஸ் மூத்த தலைவா்கள் கமல்நாத், திக்விஜய் சிங் ஆகியோா் மத்தியப் பிரதேச அரசியலில் தொடா்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தனா். கடந்த 2018-ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற பிறகு, கமல்நாத் முதல்வராகப் பொறுப்பேற்றாா்.

இதைத் தொடா்ந்து, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் பொறுப்பும் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு வழங்கப்படவில்லை. உத்தரப் பிரதேச மேற்குப் பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராகவே அவா் நியமிக்கப்பட்டாா். இதன் காரணமாக, ஜோதிராதித்ய சிந்தியா அதிருப்தி அடைந்ததாா்.

முதலில் ஜனசங்கத்திலிருந்து விலகிய தந்தை மாதவராவ், பின்னா் காங்கிரஸில் இணைந்தாா். நீண்ட காலத்துக்குப் பிறகு, அதிருப்தியில் காங்கிரஸைவிட்டு சிறிது காலம் விலகியிருந்தாா். தற்போது மகன் ஜோதிராதித்ய சிந்தியாவும் தந்தை வழியில் காங்கிரஸைவிட்டு விலகியுள்ளாா்.

பாஜகவைச் சோ்ந்த ராஜஸ்தான் முன்னாள் முதல்வா் வசுந்தரா ராஜே, ஜோதிராதித்ய சிந்தியாவின் அத்தையாவாா். ஜோதிராதித்ய சிந்தியாவின் மற்றொரு அத்தையான யசோதரா ராஜே சிந்தியாவும் மத்தியப் பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ-வாக உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

“எங்கள் குடும்பம் அதிகார பசி கொண்டதல்ல’

எங்கள் குடும்பம் அதிகார பசி கொண்டதல்ல என்று ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் மஹாஆர்யமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட பதிவில், “மரபில் இருந்து விலக துணிவு வேண்டும். எனது தந்தை, அவருக்காக எடுத்த முடிவை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். எனது குடும்பம் ஒருபோதும் அதிகார பசிகொண்டதல்ல என்பதை வரலாறு எடுத்துரைக்கும். எங்களின் வாக்குறுதிப்படி இந்தியாவிலும், மத்தியப் பிரதேசத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்றங்களை கொண்டு வருவோம்’ என்று தெரிவித்தார்.