செப்டம்பருக்குள் காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும்: அமித்ஷா தகவல்

இந்தாண்டு செப்டம்பருக்குள் ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் 70 சதவீதம் குறைந்துள்ளன. பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை 68 சதவீதம் குறைந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும்.

பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு புலம்பெயா்ந்தோருக்கும் இடஒதுக்கீடு அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமானது. அதை மீட்க வேண்டும்.

இந்தாண்டு செப்டம்பருக்குள் ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும். பாகிஸ்தானின் சதிகளில் இருந்து ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் விலகியிருக்க வேண்டும். தற்போது வறுமையால் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு மக்கள் காஷ்மீரை சொர்க்கமாக பார்க்கின்றனர். இவ்வாறு அமித்ஷா கூறினார்.