சாலையில் அமர்ந்து போலீசை கண்டித்து கேரள கவர்னர் தர்ணா

கொல்லம் அருகே சாலையில் அமர்ந்து கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தர்ணாவில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள கவர்னராக இருக்கும் ஆரிப் முகமது கானுக்கும், அம்மாநில அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. சமீபத்தில் சட்டசபை கூட்டத்தொடர் துவங்கிய போது, கவர்னர் உரையில் கடைசி பத்தியை மட்டும் வாசித்து ஆரிப் முகமது கான் பரபரப்பை ஏற்படுத்தினார். கவர்னரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுங்கட்சியின் ஆதரவு பெற்ற மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆரிப் முகமது கான் கொட்டாரக்கரா என்ற இடத்திற்கு சென்றார். கொல்லம் அருகே நிலமேல் பகுதியில் கவர்னருக்கு எதிராக மாணவர் சங்கத்தினர் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவர்கள், கவர்னர் வாகனம் அருகில் செல்ல முயன்றனர். ஆனால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

காரில் இருந்து கீழே இறங்கிய ஆரிப் முகமது கான் போலீசாரிடம் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினார். மாணவர் சங்கத்தினரை பாதுகாப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். பிறகு, போராட்டம் நடத்தியவர்களை நோக்கி சென்று அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

இருப்பினும் கோபம் குறையாத கவர்னர், அங்குள்ள டீக்கடை முன்பு சேர் போட்டு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவேன் என அறிவித்துள்ளார்.

இதனால், செய்வது அறியாது தவித்த போலீசார், அவரை சமாதானப்படுத்த முயன்றனர். 12 மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இதனை ஏற்காத கவர்னர், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறினார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.