சபரிமலை வழக்கு – 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான மறு சீராய்வு மனுவை, 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த 5 நீதிபதிகளில் 3 பேர் விரிவான அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தனர்.

கேரளாவில்,பத்தினம்திட்டா மாவட்டத்தில், பம்பை நதிக்கரையில் அமைந்துள்ளது, உலகப் புகழ்பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவில். இந்தக் கோவிலுக்கு செல்ல, 10 – 50 வயது பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்தாண்டு, செப்.,ல் தீர்ப்பு அளித்தது. ‘அனைத்து வயது பெண்களும், எந்தப் பாகுபாடு இல்லாமலும் சபரி மலைக்கு செல்லலாம்’ என, தீர்ப்பில் கூறப்பட்டது.

சபரிமலைக்கான இந்தாண்டு மண்டல கால பூஜைகள், 17ல் துவங்க உள்ளன. இந்த நிலையில்,மதம் என்றால் என்ன எனு விவாதிக்க வேண்டும் என மனுதாரர்கள் விரும்புகின்றனர். மற்ற மத வழிபாடுகள் குறித்தும் மனுதாரர்கள் கூறியுள்ளனர். தனிநபர் உரிமை மற்றும் வழிபாட்டிற்கு உரிமை இடையில் வழக்கு உள்ளது. பெண்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது சபரிமலையில் மட்டும் அல்ல வேறு கோயில்கள் மசூதிகளிலும் உள்ளது. மதம் சாரந்நத நம்பிக்கை தொடர்பான வாதங்களை கருத்தில் கொண்டோம். தீர்ப்பு ஹிந்து பெண்களுக்கு மட்டும் என வரையறுத்து விட முடியாது. அனைத்து மதத்தினரும் அவரவர் மத நம்பிக்கையை கடைபிடிக்க உரிமை உள்ளது எனக்கூறியதுடன், இந்த மறுசீராய்வு மனுவை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தனர். பெரிய அமர்வுக்கு மாற்ற கோகோய், கன்வில்கர், மல்ஹோத்ரா பரிந்துரை செய்தனர். நாரிமன், சந்திரசூட் ஆகியோர் எதிரான தீர்ப்பை வழங்கினர்.