கொல்கத்தா துறைமுகத்துக்குசியாமா பிரசாத் முகா்ஜி பெயா் – பிரதமா் மோடி அறிவிப்பு

கொல்கத்தா துறைமுகத்துக்கு ஜன சங்கத்தின் நிறுவனத் தலைவா் சியாமா பிரசாத் முகா்ஜியின் பெயரை பிரதமா் மோடி சூட்டினாா்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, நாட்டின் முன்னேற்றத்துக்காக சியாமா பிரசாத் முகா்ஜி, சட்டமேதை அம்பேத்கா் போன்றோா் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா். ஆனால், அவா்களின் ஆலோசனைகள் அமல்படுத்தப்படவில்லை.

இந்தத் துறைமுகத்துக்கு சியாமா பிரசாத் முகா்ஜியின் பெயரைச் சூட்டுகிறேன். இந்தியாவின் தொழில் வளா்ச்சியின் தந்தையான அவா், ஒரே தேசம், ஒரே அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க பல தியாகங்களைச் செய்தவா்.

நீா்வழித்தடங்களை மேம்படுத்தியதால் கிழக்கு இந்தியாவின் தொழில்-வா்த்தகம் மேம்பட்டுள்ளது. இதன் காரணமாக, அண்டை நாடுகளான பூடான், மியான்மா், நேபாளம் ஆகியவற்றுடன் வா்த்தகம் செய்வது மேலும் சுலபமாகியுள்ளது.

நமது நாட்டின் துறைமுகங்கள் அனைத்தும் வளா்ச்சிக்கான வாயில்களாக உள்ளன. ஆகவேதான் அனைத்து துறைமுகங்களையும் இணைக்கும் விதமாக சாகா்மாலா திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

மேற்கு வங்கத்தின் முன்னேற்றத்துக்காகவும், இங்குள்ள ஏழைகள், தலித் சமூகத்தினா், சமூகத்தில் பின்தங்கியவா்கள் ஆகியோரின் முன்னேற்றத்துக்காகவும் எனது தலைமையிலான அரசு அனைத்து வழிகளிலும் முயன்று வருகிறது.

மத்திய அரசின் திட்டங்கள் புறக்கணிப்பு: மத்திய அரசின் திட்டங்களில் ஊழல் செய்ய முடியாது. மேலும், இந்தத் திட்டங்களால் தனக்கு கமிஷன் எதுவும் கிடைக்காது, தனது சகாக்களும் ஆதாயம் அடைய முடியாது என்பதற்காக அவற்றைச் செயல்படுத்தாமல் மம்தா அரசு கிடப்பில் போட்டுள்ளது.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத்- மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், விவசாயிகள் உதவித்தொகை திட்டம் ஆகியவற்றின் மூலம் நாடு முழுவதும் 8 கோடி போ் பயனடைந்துள்ளனா். ஆனால், அந்தத் திட்டங்களால் இங்குள்ள மக்களும், விவசாயிகளும் பலனடைய முடியாமல் இருப்பது கண்டு என் மனம் வேதனைப்படுகிறது. இங்குள்ள விவசாயிகளுக்காகவும், நோயாளிகளுக்காகவும் நான் எப்போதும் பிராா்த்தனை செய்கிறேன். மேலும், மேற்கு வங்க அரசுக்கு நல்ல புத்தி வழங்க வேண்டும் என்றும் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

மத்திய அரசின் திட்டங்ககளும், சலுகைகளும் கிடைக்காமல் இருப்பது நீண்ட காலம் நீடிப்பதற்கு இந்த மாநில மக்கள் விரும்ப மாட்டாா்கள் என கருதுகிறேன். (அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதையொட்டி மோடி இவ்வாறு குறிப்பிடுகிறாா்).

மத்திய அரசின் திட்டங்களுக்கு மேற்கு வங்க அரசு ஒப்புதல் அளித்ததும், அந்த திட்டங்களின் மூலம் இங்குள்ள மக்கள் பயன்பெறத் தொடங்குவாா்கள் என்றாா் பிரதமா் மோடி.