காசா மக்களை முஸ்லிம் நாடுகள் ஏற்க மறுப்பது ஏன்?

”ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் வசிக்கும் பாலஸ்தீன அகதிகளை, முஸ்லிம் நாடுகள் ஏற்க மறுப்பது ஏன்,” என, அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் உள்ள நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார். மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியில் தரைவழி தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து, ஐ.நா.,வுக்கான அமெரிக்க முன்னாள் துாதரும், அடுத்தாண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் உள்ளவருமான நிக்கி ஹாலே, தனியார் ‘டிவி’க்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

பாலஸ்தீன மக்களை, குறிப்பாக அப்பாவி மக்களை நாம் கவனிக்க வேண்டும். தற்போதுள்ள போர் சூழலை அவர்கள் விரும்பவில்லை. இந்த விஷயத்தில் அரபு நாடுகளான லெபனான், ஜோர்டான், எகிப்து ஆகியவை என்ன செய்கின்றன? எகிப்துக்கு கடந்தாண்டு பல கோடி ரூபாய் பணத்தை கொடுத்துள்ளோம். அவர்கள் ஏன் தங்கள் கதவை திறக்கவில்லை? பாலஸ்தீனியர்களை ஏன் ஏற்கவில்லை? ஏனென்றால், ஹமாஸ் பயங்கரவாதிகள் தங்களுக்கு அருகில் இருப்பதை இந்த அரபு நாடுகள் விரும்பவில்லை.

அப்படியிருக்கும்போது, இஸ்ரேல் மட்டும் எப்படி தனக்கு அருகில் ஹமாஸ் பயங்கரவாதிகள் இருப்பதை ஏற்க முடியும்? அதனால் இந்த விஷயத்தில் நாம் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

யார் நல்லவர், யார் கெட்டவர் என்று நம்ப முடியாததால், பாலஸ்தீனியர்கள் தங்கள் நாட்டுக்குள் வருவதற்கு இந்த நாடுகள் விரும்பவில்லை. ஆனால், தற்போது நடப்பதற்கு இஸ்ரேலையும், அமெரிக்காவையும் குற்றம் கூறுவர். அவர்கள் நினைத்தால், இந்த பிரச்னையை தீர்க்க முடியும். பயங்கரவாதத்தை நிறுத்தும்படி ஹமாஸ் அமைப்புக்கு கூற முடியும். ஹமாஸ் அமைப்பு மற்றும் அதன் தலைமையுடன், கத்தார் தொடர்ந்து இணைந்து செயல்படுகிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஈரான் தொடர்ந்து நிதி அளித்து வருகிறது.

அதனால், இந்த அரபு நாடுகள் இந்த விஷயத்தில் அமைதியாக இருக்கின்றன. ஆனால், இஸ்ரேலையும், அமெரிக்காவையும் குற்றஞ்சாட்டுகின்றன. காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் வெளியேறுவதை ஹமாஸ் விரும்பவில்லை. அவர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும். அந்த மக்களையே மனித கேடயமாக பயன்படுத்துகிறது. அதற்கு அந்த மக்கள் அங்கு இருக்க வேண்டும். அப்பாவி மக்களை கொல்கின்றனர் என, இஸ்ரேலுக்கு எதிரான பிம்பத்தை உருவாக்க, அந்த மக்கள் காசாவிலேயே இருப்பதை, ஹமாஸ் விரும்புகிறது

ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய அட்டூழியங்கள், கொடுமைகளை மறக்க முடியுமா? உயிரை காப்பாற்றிக் கொள்ள பெண் குழந்தைகள் ஓடியதை மறக்க முடியுமா? தொட்டிலிலேயே குழந்தைகள் உயிரிழந்து கிடந்ததை மறக்க முடியுமா? மக்களை சாலைகளில் இழுத்து வந்து, கொடுமைப்படுத்தியதை மறக்க முடியுமா? ஆனால், இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் எதிராக குரல் கொடுக்கின்றனர்.

ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் இருந்து, ஐந்து அமெரிக்கர்களை மீட்பதற்காக, 50,000 கோடி ரூபாயை அரசு வழங்கியுள்ளது. ஐந்து பேருக்கே இவ்வளவு கொடுத்தால், அத்தனை பேரையும் மீட்க எவ்வளவு கேட்பர்? அமெரிக்கா வலுவாக இருக்க வேண்டும். இஸ்ரேல் அரசுக்கு ஆதரவு தர வேண்டும். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆபத்தான பகுதியில் இந்திய வீரர்கள்!

ஐ.நா.,வின் அமைதிப் படையில், நம் நாட்டு வீரர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். கடந்த 1948ல் உருவாக்கப்பட்ட இந்த படைக்கு அதிக வீரர்கள் அனுப்பும் நாடுகளில், ஐந்தாவது இடத்தில் இந்தியா உள்ளது. இதுவரை, 2.60 லட்சம் வீரர்கள், இந்த படைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில், ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில், மோதல் நடைபெறும் பகுதிகளில், 5,800 இந்திய வீரர்கள் உள்ளனர்.தற்போது, இஸ்ரேல் – லெபனான் எல்லையில், 900 இந்திய வீரர்கள், ஐ.நா.,வின் லெபனானுக்கான இடைக்கால படையில் உள்ளனர். லெபனானில் இருக்கும் ஹெஸ்பெல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதையடுத்து இஸ்ரேலும் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில், இரு நாட்டின் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள, 900 இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த கவலை ஏற்பட்டுள்ளது.இதைத் தவிர, இஸ்ரேல் – சிரியா எல்லையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள, ஐ.நா., படையில் 200 இந்திய வீரர்கள் உள்ளனர். இவர்களும் ஆபத்தான பகுதியில் உள்ளதாக கூறப்படுகிறது.

 

போர் நிறுத்தமா?

இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள், மற்றொரு அண்டை நாடான எகிப்துக்கு செல்வதற்கு ஏதுவாக போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.இஸ்ரேல், அமெரிக்கா, எகிப்து இடையே நடந்த பேச்சில், காசா – எகிப்து எல்லையான ரபா வழியாக பாலஸ்தீனியர்கள் வெளியேறும் வகையில் போரை நிறுத்தி வைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதை இஸ்ரேல் மறுத்துள்ளது. இவ்வாறு எந்த ஒரு பேச்சும் நடக்கவில்லை என இஸ்ரேல் கூறியுள்ளது.