கன்வர் யாத்திரையில் சோகம்

உத்தரபிரதேசத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் கன்வார் புனித யாத்திரைக்காக நடந்து சென்ற பக்தர்கள் மீது ஒரு லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழப்பு ஆறாக உயர்ந்துள்ளது. வடமாநிலங்களில் கன்வார் புனித யாத்திரை ஒவ்வொரு வருடமும் ஹிந்துக்களின் புனிதமான சிராவண மாதத்தில் நடைபெறும். இந்த யாத்திரையின் போது, சிவபக்தர்கள், புனிதமான கங்கை நதியின் நீரைப் எடுத்து வருவதற்காக உத்தரகாண்டில் உள்ள ஹரித்வார், கவுமுக் போன்ற புனிதத் தலங்களிற்கு நடந்து செல்கிறார்கள். அந்த நீரை தங்கள் வீடுகளுக்குக் கொண்டு வந்து இறைவனுக்கு படைப்பார்கள். கடந்த இரு வருடங்களாக கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த யாத்திரை இவ்வருடம் கோலாகலமாகத் தொடங்கியது. மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியரை சேர்ந்த 7 கன்வார் பக்தர்கள் தங்கள் யாத்திரையை முடித்துவிட்டு, ஹரித்வாரிலிருந்து குவாலியர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. டிரைவர் குறித்த தகவல் கிடைத்துள்ளது, அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.