ஓ. பன்னீர் செல்வம் முதல்வர் பதவியைத் தக்க வைத்துக் கொள்வாரா? பரதன் பதில்கள்

அம்பானி, அதானி போன்றோரைத்தான் மோடி வளர்க்கிறார் என்ற குற்றச்சாட்டு பற்றி?
– பெ. சுரேந்தர், மதுரை

நரேந்திர மோடி கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் பிரதமராக இருக்கிறார்.

அம்பானியும் அதானியும் இந்த இரண்டு ஆண்டுகளில்தான் கோடீஸ்வரர்கள் ஆனார்களா?

ரொக்கமில்லா பரிமாற்றம் (ஞிச்ண்டடூஞுண்ண்) வந்தால் என்ன பயன்?
– பி. ராமசாமி, மாம்பலம்

பள்ளி, கல்லூரிகளில் நன்கொடை வாங்க முடியாது. அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்க முடியாது. ஊழல் அரசியல்வாதிகளும் கல்வி நிறுவனத் திமிங்கிலங்களும் எதிர்ப்பதன் காரணம் இதுதான்.

‘ஜெயலலிதா’வின் குடும்ப வழக்கப்படி எரிப்பதுதானே வழக்கம்?
– உமா கோபாலன், பண்ருட்டி

எரிப்பது என்றால் யார் வாரிசு என்ற குழப்பம் வருமே. இனி அதற்காகத்தானே போட்டி.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதில் பல வங்கி அதிகாரிகளே ஊழல் செய்து வருகிறார்களே?
– வே. குணசுந்தரி, தேவகோட்டை

நமது நாட்டின் துரதிர்ஷ்டம் இதுதான். நல்லதொரு பிரதமர், நல்ல திட்டம் இருந்தாலும்கூட இத்தகைய கயவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். ஒன்று மட்டும் நிச்சயம். தவறான வழியில் சம்பாதிக்கும் இந்தப் பணம் இவர்களுக்கு நிம்மதியைக் கொடுக்கப் போவதில்லை.

ஓ. பன்னீர் செல்வம் முதல்வர் பதவியைத் தக்க வைத்துக் கொள்வாரா?
– திருமதி மாதங்கி, சிதம்பரம்

ஒரு குதிரையைப் பற்றிச் சொல்வார்கள். தகுதியில்லாத யாராவது அதன் மீது சவாரி செய்யலாம் என விரும்பி ஏறினால் அவர்களைக் கீழே தள்ளி விடுமாம். அதிர்ஷ்டத்தால் சில உயர்ந்த பதவிகள் கிடைக்கலாம். ஆனால் திறமையும் தகுதியும் இருந்தால் மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடியும்.

‘ஆச்சி மசாலா’ உரிமையாளர் தீவிர கிறிஸ்தவ பிரச்சாரத்திற்கு துணை போகிறாராமே?
– பா. சேர்மக்கனி, நாங்குநேரி

யாராக இருந்தாலும் மதப்பற்று இருக்கலாம். ஆனால் மதவெறிதான் கூடாது.

ஜெயலலிதாவின் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராகுல் உடல் நலமில்லாத கலைஞரை சந்திக்காமல் சென்றது ஏன்?
– சி. கலியமூர்த்தி, விருத்தாச்சலம்

இப்போது மட்டுமல்ல. கடந்த மாதம் வந்தபோதும் கூட சந்திக்கவில்லையே! இந்த மடம் (திமுக) இல்லையென்றால் இன்னொரு சந்தை மடம் என்று திமுகவிற்கு உணர்த்துவதற்காக சமிக்ஞை கொடுக்கிறார் என்றே தோன்றுகிறது.

* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.

One thought on “ஓ. பன்னீர் செல்வம் முதல்வர் பதவியைத் தக்க வைத்துக் கொள்வாரா? பரதன் பதில்கள்

  1. திருக்குறள் முதல் பாடல் ஆதி பகவன் என்பது முழு முதல் கடவுள் என்று பொருள். விநாயகர் காப்பு பாடியே குறள் துவங்கப்பட்டடது.
    ஆனால் நாத்திகர்கள் இதை மறைத்து தை தஹந்தை பெயர் என்று கூறியுள்ளார் கள்

Comments are closed.