எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மக்களுடன் பதற்றத்தை ஏற்படுத்தும்நோக்கிலேயே பேசி வருகிறார் – முதல்வர் பழனிசாமி

எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: சட்டப்பேரவை கூட்டம் நடக்கும்போது முதல்வரும், அமைச்சர்களும் திட்டங்கள், அறிவிப்புகளை வெளியில் வெளியிடக்கூடாது என்பது மரபு. ஆனால்,நேற்று (மார்ச் 12) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ‘தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதை சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: என்பிஆரில் கூடுதலாக கேட்கப்பட்டுள்ள 3 கேள்விகள் குறித்து தமிழக அரசு கேட்ட விளக்கத்துக்கு மத்திய அரசிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை. எனவே,தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பு நடத்துவது குறித்து அறிவிக்கப்படவில்லை என்று மார்ச் 11-ம் தேதி சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தேன். அதைத்தான் செய்தியாளர்களிடம் தெரிவித்தேன். இதில் உரிமை மீறல் எதுவும் இல்லை. என்பிஆரில் ஆவணங்கள் கேட்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்து பேசி வருகின்றனர். அதில் உண்மைஇல்லை. என்பிஆரில் எந்த ஆவணங்களும் கேட்கப்படவில்லை. இதை நாடாளுமன்றத்தில் மத்தியஉள்துறை அமைச்சரே தெளிவுபடுத்தியுள்ளார். எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களைக் கூறி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி வரும்போது ஆட்சியில் இருக்கும் நாங்கள் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கிறோம்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்: ஆவணங்கள் எதுவும் கேட்கப்படவில்லை என்றால் எதற்காக விளக்கம் கேட்டுமத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறீர்கள். அமைச்சர் பேசியதை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை.

முதல்வர் பழனிசாமி: என்பிஆர்கணக்கெடுப்பு இன்னும் தொடங்கப்படாத நிலையில், வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விடுவார்கள் என்றெல்லாம் கூறி சிறுபான்மை மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறீர்கள். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புதான் தற்போது நடக்கவுள்ளது. ஆனால், அதற்கு ஒத்துழைப்பு கொடுக்காதீர்கள் என்று மக்களிடம் சூழலை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறீர்கள்.