இளைஞர்களை மீட்ட ராணுவத்தினர் – ” ஆபரேஷன் மா “- வெற்றி

காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த 60 இளைஞர்களை பேசியே திருத்தி கொண்டு வருவதில் இந்திய ராணுவத்தினர் வெற்றி பெற்றுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் பாக்., பயங்கரவாத அமைப்புகள் கால் ஊன்ற கடும் முயற்சி செய்து வருகின்றன. இந்தியாவில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் விதமாக பாக்., பயங்கரவாதிகள் காஷ்மீரை சேர்ந்த இளைஞர்களை மூளைச்சலவை செய்து இயக்கத்தில் சேர்த்து வருகின்றனர். மேலும் இது போன்ற இளைஞர்களுக்கு பண உதவியும் வழங்கி வந்தனர். இதனால் உள்ளூரில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரை காஷ்மீர் இளைஞர்கள் எதிரியாகவே பாவிக்கும் நிலை மாறியது.

எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு, பயங்கரவாதிகள் சுட்டு கொல்வது என ராணுவத்தினர் வெற்றி பெற்றாலும் , உள்ளூர் இளைஞர்களை சரி செய்வதற்காக ராணுவத்தினர் ” ஆபரேஷன் மா “- என்ற திட்டத்தை துவக்கினர். 15 வீரர்கள் கொண்ட இந்த குழுவினர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் செயல்பட்டு வருகின்றனர். இதற்கு லெப்டினன்ட் ஜெனரல் தில்லான் தலைமை கமாண்டராக நியமிக்கப்பட்டார்.

இந்த குழுவினர் உளவுதுறையினர் மூலம் பயங்கரவாத தொடர்புடையவர்களை அழைத்து அன்பாக பேசி அவர்களை திருத்துவதே இவர்களின் முக்கிய பணி. முதலில் சம்பந்தப்பட்ட இளைஞர்களின் தாய்களிடம் பேசுவது, இவர்கள் மூலம் இந்த இளைஞர்களுக்கு அறிவுரை வழங்குவது என துவங்கி, பல முறைகளில் மனம் மாற்றப்படுவர்.

இந்த முயற்சிக்கு நல்ல வெற்றி கிடைத்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்: இது வரை 60 பேர் மனம் திருந்தியுள்ளனர். அவர்களுக்கான மன நல ஆலோசனைகள் வழங்குவது, அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிப்பது முக்கிய பணியாகும். இன்னும் 20 பேர் வரை திருத்தும் பணி நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.