இது பனிப்பாறையின் முனை

பின்சென் பைல்ஸ்’ இன்று பல அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. ரூ. 11000 கோடி, சந்தேகத்திற்கிடமான 3000 பரிவர்த்தனைகள், தாவூத், லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

2-ஜி வழக்கு பணப் பறிமாற்றமும் இதில் நடந்திருக்கலாம் என்பதால், அரசியலிலும் பரபரப்பை எதிர் பார்க்கலாம். கருப்பு பணம் குறித்த தகவல்கள் வெளிவருவது, இது முதல்முறை அல்ல.

ஏற்கனவே ஆப்ஷோர் லீக்ஸ், ஸ்விஸ் லீக்ஸ், பனாமா பேப்பர்ஸ், பாரடைஸ் பேப்பர்ஸ், லக்ஸ் லீக்ஸ் என வெளியாகியுள்ளன. இதில் பலர் சிக்கியும் உள்ளனர். ஆனால் இந்த ‘பின்சென் பைல்ஸ்’ சற்று வித்தியாசமானது.

இதில் நபர்கள், நிறுவனங்கள் மட்டுமில்லாமல், எந்த வங்கி, எவ்வளவு பணம் என்ற தகவலும் உள்ளது. அரசு, தனியார் என பல வங்கிகளும் சிக்குவதால், விசாரணையில் இன்னும் பூதங்கள் பல வெளிவரும். பல பெரிய தலைகளும் உருளும்.

ஆனால், இது பெரும் பனிப்பாறையின் முனை மட்டுமே. ‘பாரதத்தில் நடைபெறும் அனைத்து ஹவாலா முறைகேடுகளும் தாவூத் இப்ராகிம், ஐ.எஸ்.ஐக்கு தெரியாமல் நடப்பதில்லை. இதுவே சில அரசியல் கட்சியினர், சினிமா துறையினர், தொழிலதிபர்கள் என பலரும் பாகிஸ்தானையும், சிறுபான்மையினரையும் ஆதரிக்கும் ரகசியம்’ என சுப்பிரமணிய சாமி கூறியதன் பொருள் மக்களுக்கு போகப்போக புரியும்…!

தமிழக தேர்தலிலும் பின்சென் பைல்ஸின் தாக்கம் எதிரொலிக்கும். பலர் முதல் முறையும், சிலர் இரண்டாம் முறையும் சிறை செல்லும் யோகமும் உண்டு!! எதற்கும் பரிகாரம் செய்துகொள்வது நல்லது!..