இது இலையுதிர் காலம்!

பதவி என்னும் விளக்கில் விழுந்து உயிர்துறக்கும் விட்டில் பூச்சியாக மாறி அஇஅதிமுக அழிந்து வருவது வருத்தமாக இருக்கிறது. மீண்டும் அஇஅதிமுக தானா? என நீங்கள் கேட்பதும் காதில் விழுகிறது!

இந்த கட்டுரை உங்கள் வாசிப்பில் இருக்கும்போது அஇஅதிமுக இணைந்திருக்குமா? அல்லது மூவரும் முட்டிமோடி ரத்தக் களறியில் உயிர் போயிருக்குமா? என்பது கேள்விக்குறிதான்!

அம்மா என்கிற இணைப்புச் சங்கிலி இல்லாமல் போனதால், தறிகெட்டுப்போன இந்த கன்றுகுட்டிகள் கசாப்புக் கடைக்காரனின் கைகளில் மாட்டிக்கொண்டிருப்பது உண்மைதான்!

இணைந்து விடும்! இணையப் போகிறோம்… இணைப்புக்குழுக்கள் இணைந்து விடுவோம்” என்கிற அறிக்கைகளை உடைத்தெறியும் வீரவசனங்கள் மூவரிடமிருந்து ஏவுகணைகளாக வீசப்படுவதும் அவைகள் எதிரிகளை தாக்காமல், சகோதரர்களை தாக்கி அழிக்கும் எல்டிடிஈ யுத்தம் போல அதிமுகவிற்குள்ளேயே அழிப்புகளை நிகழ்த்துவதுமாக தமிழக அரசியலில் களத்திலிருந்து அதிமுகவை இல்லாமல் செய்துவிடுமோ என்கிற அச்சம் எழுந்திருக்கிறது!

எடப்பாடி பழனிச்சாமியை பதவி இறக்க ஜெயக்குமாரும் தினகரனை திவாலாக்க நாஞ்சில் சம்பத்தும் ஓபிஎஸ்ஸை உருப்படி இல்லாமல் செய்ய டாக்டர் மைத்ரேயனும் போதும் என்பது இவர்களின் அறிக்கைகளும் பத்திரிகை பேட்டிகளுமே சாட்சி!

டிசம்பர் 5க்குப் பிறகு இன்று வரை அதிமுக அரசு தொடர்வதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும் இன்றைக்கு துணை ஜனாதிபதியாகி இருக்கிற வெங்கையா நாயுடுவுமே காரணம்! அம்மா இல்லாமல், திக்குதெரியாத காட்டில் தனித்துவிடப்பட்ட அதிமுகவையும் அதன் அரசையும் தந்தையின் பாசத்தோடு வழிநடத்திய பெருமை இவர்களையே சாரும்!

இழவு விழுந்த வீட்டில், சொத்துக்களை சூறையாடும் சொந்தக்காரர்கள் போலின்றி, அதிமுகவை அழிக்க நினைப்போரிடமிருந்து இதுவரை, பாஜக இவர்களை காப்பாற்றி வந்துள்ளது அரசியல் உலகின் ஆச்சர்யம் தான். இதற்கு காரணம் பாஜகவின் ஆர்.எஸ்.எஸ். வளர்ப்பு! எரியும் வீட்டை அணைக்கும் முயற்சியை மட்டும் செய்து, அதிலுள்ளவர்களை காப்பாற்றும் பணியை செய்து, உரியவர்களிடம் சொத்துக்களை சேர்க்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் பயிற்சி, பாஜகவின் சிறப்பு! இதை உணர மறுப்பவர்கள் தான் பாஜக கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்க நினைக்கிறது என்றும், தமிழகத்தில் பாஜக மறைமுகமாக ஆட்சி நடத்துகிறது என்றும் பொல்லாங்கு பேசி வருகின்றனர்!

இது பாஜகவின் வளர்ச்சியை பொறுக்க முடியாதவர்களின் வயிற்றெரிச்சல் என்பது மட்டும் புரிகிறது.

மணியம்மை என்கிற 20 வயது பெண்ணை 80 வயது தாத்தா திருமணம் செய்தார் என்கிற மிகப்பெரிய ‘கொள்கை’ வேறுபாட்டால் திமுக தோன்றியது! இதுதான் தி.க. உடைய காரணம் என்று பேசப்பட்டது!

கருணாநிதியின் ‘ஊழல்’ எம்.ஜி.ஆர். அஇஅதிமுக உருவாக்க காரணமாயிற்று! எம்.ஜி.ஆருக்குப் பிறகு வாரிசில்லாத அதிமுக (ஆம்! இக்கட்சிகளுக்கு ஜனநாயக முறையில் நம்பிக்கை கிடையாது) எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்த ஜெயலலிதாவை தலைவராக்கி உடைந்து ஒட்டிக் கொண்டது!

தற்போது ‘ஜெ’வுக்குப் பிறகு ‘வாரிசில்லா’ குடும்பமாகி, வாரிசு சண்டை வலுத்து அழிவை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது!

அஇஅதிமுக அழிந்து போனால், தமிழக அரசியலில் வெற்றிடம் உண்டாகுமா? ஏற்கனவே உள்ள திமுக அந்த இடத்தை இயல்பாக நிரப்பாதா? இதை ஒரு பெரிய விஷயமாக எழுதிக் கொண்டிருக்கிறீர்களே என்கிற பேச்சும் கேட்காமல் இல்லை!

தற்போது அஇஅதிமுக அடுத்த தேர்தலை பற்றி கவலைப்படுவது பயன்ற்றது அடுத்த மாதமல்ல அடுத்த வாரத்தை பற்றி கவலைப்படும் நிலையில் உள்ளது!

இந்த மூவர் அணியும் தங்களுக்குள் இப்போது அவசரம் அவசரமாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார்கள். இது இவர்கள் இணைப்பை பற்றி பேசுவது பொய் என்பதற்கு அத்தாட்சி!

இந்த குழப்பங்களுக்கு நடுவே, தன்னை தொண்டர்கள் மத்தியில் நிலை நிறுத்திக் கொள்ள ‘முன்னாள் பினாமி’ ஓபிஎஸ்ஸும் ‘சகோதர பினாமி’ ஈபிஎஸ் மீது சந்தேகங் கொண்டு, ‘ஊழல் எதிர்ப்பு’ போராட்டம் செய்ய துடிக்கிறார்!

இந்த விமர்சனங்கள் எல்லாம் நமக்குத் தேவை இல்லைதான்! ஆனாலும் திமுக தன்னை தயார் படுத்திக் கொள்வதற்கு முன்பு (அப்படி கவலைப்பட தேவை இல்லை! திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் தான் இன்று அதிமுகவின் பலமே) தமிழகத்திலிருந்து திராவிடக் கட்சிகள் களையெடுக்கப்பட வேண்டும்!

இந்த ‘சகோதர யுத்தம்’ என்ற பெயரில் நடக்கும் பதவிப் போட்டியின் முடிவு ஆட்சி இழப்புத்தான்! இயற்கை மரணம் அடையப்போகும் அதிமுகவிற்கு மாற்று பாஜக தான்!

எம்.ஜி.ஆர் பெற்ற சின்னம் இரண்டை இலையால் அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்றது உண்மைதான். ஆனால் தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாக பாவித்த எம்.ஜி.ஆர் அதை தாங்கிப் பிடித்து சென்ற ஜெயலலிதா ‘ஊழலை முதலாக’ போட்டு ஆட்சி செய்த அவலம் மறக்க முடியாதது, மன்னிக்க முடியாதுதான்.

ஆனாலும், அவர்கள் விட்டுச் சென்ற லட்சக்கணக்கான தொண்டர்கள் இன்னும் ஓரணியில் தான் இருக்கிறார்கள். பதவி சுகம், பண சுகம் கண்ட ஒரு சிலரை தவிர, அஇஅதிமுக தொண்டர்கள் இன்னும் எம்ஜிஆரை தெய்வமாகத்தான் வணங்குகிறார்கள்.

அவர்களுக்கு, ஆறுதல், தேறுதல், மாறுதல் தரும் வல்லமை, ஊழலற்ற, நேர்மையான, வளர்ச்சி தரும் ஆட்சி தரும் வல்லவன் நரேந்திர மோடியின் பாஜகதான்!

இது இலையுதிர்காலம்! இலைகள் உதிர்வது இயற்கையின் தத்துவம்! திராவிடம் அழிவது ஆண்டவனின் சித்தம்!