ஆளுநர் உரையுடன் பிப்.12-ல் சட்டப்பேரவை தொடங்குகிறது; பிப்.19ல் தமிழக பட்ஜெட் தாக்கல்: பேரவைத் தலைவர் அறிவிப்பு

சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குவதாகவும், பிப்.19-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாகவும் பேரவைத்தலைவர் அப்பாவு அறிவித்தார்.

இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவைக் கூட்டத்தை, ஆளுநர் ஆர்.என்.ரவி, வரும் பிப்.12-ம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள பேரவை அரங்கில் கூட்டிஉள்ளார். அன்றைய தினம், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வரும் பிப்.19-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து பிப்.20-ம் தேதி 2024-25-ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையையும், பிப்.21-ம் தேதி 2023-24-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான இறுதி மானிய கோரிக்கையையும் தாக்கல் செய்கிறார். ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றம் சட்டப்பேரவையையோ, சட்டப்பேரவை தலைவரையோ கட்டுப்படுத்தாது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு என்பது வேறு. ஆனால், சட்டப்பேரவையில் ஒரு உறுப்பினரை எங்கு அமரவைக்க வேண்டும் என்பதற்கான முழு உரிமையும் பேரவைத் தலைவருக்குத்தான் உண்டு. இதை நான் மட்டுமல்ல, முன்னாள் பேரவைத் தலைவர் பி.தனபாலும் சட்டப் பேரவையிலேயே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்வது தொடர்பாக, மறைந்த முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுக, சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையாக காட்ட முடியாது என்று தெரிவித்திருந்தது. தற்போது அந்த வழக்கில் அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி தன்னையும் இணைத்துக் கொண்டு முழுமையாக நேரலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றபின், முழுமையாக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையாக காட்ட வேண்டும் என்பதுதான் திட்டமாக உள்ளது. அதை நோக்கிதான் தற்போது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, கேள்வி-பதில்கள் முழுமையாகவும், முக்கிய கவன ஈர்ப்பு மற்றும் அரசு தீர்மானங்களும் காட்டப்பட்டு வருகின்றன. ஆனால், நாட்டில் பல மாநிலங்களில் நம்மைப்போன்று சட்டப்பேரவை நிகழ்வுகளை காட்டுவதில்லை. அடுத்ததாக பேரவையில் நடைபெறும் விவாதத்தையும் முழுமையாக நேரலை செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம். அதற்கான பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். நாங்கள் எதையும் மறைக்கவில்லை.

கடந்த 1921-ல் இருந்து இன்று வரை உள்ள சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஆன்லைனில் பார்ப்பதற்காக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தற்போது சட்டப்பேரவைக்கு உள்ளே நடைபெறுவதையும், வெளிப்படைத்தன்மையுடன் முந்தைய நிகழ்வுகள் தொடர்பான தகவல்களையும் அளிக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.