ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு வயது 92

இந்த விஜயதசமி திருநாளன்று ஆர்.எஸ்.எஸ் தனது 92வது வயதில் அடியெடுத்து வைக்கிறது. 1925ல் விஜயதசமி அன்று நாகபுரியில் டாக்டர் ஹெட்கேவார் ஆர்.எஸ்.எஸ்ஸை துவக்கினார். ஹிந்துக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கி ஹிந்து ஒற்றுமையை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கம்.

ஆர்.எஸ்.எஸ் பற்றிய உண்மையான தன்மை பற்றிய தகவல்களை விட பிரிவினைவாதிகளும் தேச விரோதிகளும் நடத்திய பிரச்சாரமே ஓங்கி ஒலித்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சகட்டுமேனிக்கு சுமத்தி வருகின்றன.

ஆர்.எஸ்.எஸ் ஹிந்துக்களை ஒற்றுமைப்படுத்தப் பாடுபடுவது எப்படித் தவறாகும்? முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கென ஏராளமான அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அதெல்லாம் தவறில்லை. ஹிந்துக்களுக்காக செயல்படுவது மட்டும் தவறா?

உலகில் முஸ்லிம்கள்,  கிறிஸ்தவர்கள், பௌத்தர்களுக்கென ஏராளமான நாடுகள் உள்ளன. சுமார் 125 கோடி ஹிந்துக்களுக்கென ஒரு நாடு இருக்கக் கூடாதா? இங்கும் ஹிந்துக்களை ஏமாற்றி முஸ்லிம்களாக, கிறிஸ்தவர்களாக மதம் மாற்றி வருகின்றனர். ஹிந்துக்களின் ஜனத்தொகை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலை மாற்றப்பட வேண்டும் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ் செயல்பட்டு வருகிறது.

இவ்வளவு எதிர்ப்பிற்குப் பிறகும் கூட ஆர்.எஸ்.எஸ் வளர்ந்து வருகிறது என்றால் காரணம், ஆர்.எஸ்.எஸ் பக்கம் தர்மம் இருக்கிறது. இன்று பாரதத்தில் சுமார் 50,000 ஊர்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தினசரி கிளைகள் (ஷாகாக்கள்) நடைபெற்று வருகின்றன. இது தவிர, பின்தங்கிய பகுதிகள், மலைவாழ் மக்கள் வாழும் பகுதி, மீனவர் பகுதி, கிராமங்கள், நகரங்களில் சுமார் 1,50,000 தொண்டு காரியங்கள் நடைபெற்று வருகின்றன.

வருகின்ற 2025ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் தனது நூற்றாண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறது. அப்போது பாரதம் உலகின் குருவாகும் என்று சொன்னால் அது மிகையாகாது.