ஆர்எஸ்எஸ், பாஜக நிகழ்ச்சி என்பதால் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம்: காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

உ.பி. அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் வரும் 22-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள், பல்வேறு துறை சார்ந்த பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த வகையில், காங்கிரஸ் தலைவர்களான சோனியா, மல்லிகார்ஜுன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, முன்னாள் பிரதமர்மன்மோகன் சிங், பிஹார் முதல்வர்நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராமரை வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை மதிக்கிறோம். அதேநேரம் கட்டுமானப் பணி முழுமையாக முடியாத நிலையில், ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ளது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் தேர்தல் ஆதாயத்துக்காக அவசரமாக கோயில் திறப்பு விழாவை நடத்துகின்றனர். இது ஆர்எஸ்எஸ், பாஜக நிகழ்ச்சி என தெளிவாக தெரிவதால், மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.