அரவிந்த் கேஜ்ரிவால்:கோமாளியா, கோடரியா?

அரவிந்த் கேஜ்ரிவால் மாட்டிக் கொள்வார். இந்த அரவிந்த் கேஜ்ரிவால் அண்ணா ஹசாரே  மற்றும் பலருடன் சேர்ந்து ஊழலுக்கு எதிராகப் போராடியது நாடகமே. அரசியல்வாதிகள் அனைவரும் திருடர்கள் என்று கூக்குரலிட்ட அரவிந்த் கேஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியைத் துவக்கி,  அரசியல்வாதியானார். இது முதல் கோணல். ஊழல் செய்ததற்காக எந்த காங்கிரஸ் கட்சியை எதிர்த்தாரோ அதே காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்து தனது முதல்வராகும் ஆசையைத் தணித்துக் கொண்டார்.

முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உட்பட பலர் காமன் வெல்த் விளையாட்டில் ஊழல் செய்ததனால் கைது செய்யப்படுவார்கள் என்று தேர்தலின்போது கொக்கரித்தார். காங்கிரஸ் தயவில்  தமக்கு முதல்வர் பதவி கிட்டியவுடன், காமன் வெல்த் விளையாட்டில் ஊழல் எந்தவித ஆதாரங்களும் இல்லை என்று மறுதலித்தார்.

தான் முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்தக்கப்பட்டால் தனக்கு அரசு பங்களா தேவையில்லை, அது மக்கள் பணம் என்றார். பின் பதவியேற்றவுடன், ஐந்து படுக்கையறைகளைக் கொண்ட ஒரு ட்யூப்ளக்ஸ் பங்களா போதாது என்று இரண்டை பெற்றுக் கொண்டு வசித்து வருகின்றார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நானோ எனது அமைச்சர்களோ அரசு கார்களை உபயோகிக்க மாட்டோம் என்று சொன்ன கேஜ்ரிவாலின் அமைச்சர்கள் பதவி ஏற்கும் போதிலிருந்தே அரசு கார்களில் வலம் வரத் துவங்கியிருந்தனர்.

பின்னர் இன்னும் ஒரு படி மேலே போய் அரசின் பாதுகாப்பு வளையத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஏனெனில் நான் மக்கள் வரிப்பணம் வீணாவதை விரும்பவில்லை என்றார். ஆனால் முதல்வர் ஆனது முதல் இன்றுவரை மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்தைக் கேட்டுப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி துவக்கப்படுவதற்கு முன் வேறு எந்த அரசியல் கட்சித் தலைவர்கள் மீதும்  மை வீசியதாக  நாம் கேள்விப்பட்டதில்லை. ஆனால் ஆம் ஆத்மி கட்சி துவக்கப்பட்ட பின் தான் மை வீசி, ஆம் ஆத்மிக் கட்சித் தலைவர்கள் தாக்கப்பட்டனர். இதை விளம்பரத்திற்காக இவர்களே செய்கிறார்கள் என முணுமுணுப்பு பல இடத்திலிருந்தும் ஒலிக்க ஆரம்பித்தவுடன் இது நின்றுவிட்டது. சந்தேகம் ஊர்ஜிதமாகியது.

இதைவிட கேஜ்ரிவாலிடம் கண்டிக்கத்தக்க விஷயம் இவரும் இவரின் கட்சிக்காரர்களும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் தேசியவாதிகளுக்கு எதிராகவும் குரலெழுப்புவது தான். ஹிந்துக்கள் தாக்கப்படும்போது கண் மூடி மௌனியாக இருக்கும் கேஜ்ரிவால், ஒரு திருடனோ அல்லது தீவிரவாதியோ அவன் இஸ்லாமியனாக இருந்தால் உடனே அவர்களை ஆதரிக்கிறார்.

கட்சியில் கேஜ்ரிவால் கவனம் செலுத்தாததன் விளைவு அவர் கட்சி துவங்கும்போது உடனிருந்த கட்சிப் பொறுப்பாளர்களில் அதிகம் பேர் இவரை விட்டு விலகி விட்டனர். இப்போது இவரோடு சட்டசபையில் இருப்பவர்களில் பலர், போலிச் சான்றிதழ் குற்றம் சாட்டபட்டவர்கள், ஊழல் குற்றச்சாட்டுகள், கற்பழிப்பு குற்றச்சாட்டுகள், போதைப் பொருள் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள், தீவிரவாதச் செயல்களுக்கு ஆதரவுக் குரல் எழுப்புபவர்கள் மட்டுமே. ஆட்சியில் கவனம் செலுத்தாததால் தலைமைச் செயலாளரே ஊழல் குற்றச்சாட்டால் நீக்கப்படுகிறார். கேஜரிவால் அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்புகிறார்.

இந்தியாவிற்கு எதிராக குரல் கொடுப்பது, நம் ராணுவத்திற்கு எதிராக பாகிஸ்தான் செய்யும் செயல்களைக் கண்டிக்காமல் இருப்பது போன்றவற்றைப் பார்த்தால் கேஜரிவால் ஏதாவது மறதி நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறாரோ என்ற சந்தேகம்  கூட எழுகிறது. இந்த நோய்க்கான காரணம் அமெரிக்காவின் ஃபோர்ட் ஃபவுன்டேஷனா? பயங்கரவாதிகளின் நிதியுதவியா? இந்த நோய்க்கான காரணத்தை நிச்சயம் மத்திய அரசு தான் கண்டுபிடிக்க வேண்டும், நோய் சரிசெய்யப்பட வேண்டும்.