அயோத்தி வழக்கு – 18 சீராய்வு மனுக்கள் தள்ளுபடி

அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சீராய்வு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உ.பி.,யில் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தின், ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு, நவ., 9ம் தேதி தீர்ப்பு அளித்தது. தீர்ப்பில்; ‘சர்ச்சைக்குரிய நிலத்தில், ஹிந்துக் கடவுள் ராமருக்கு கோவில் கட்டலாம். மசூதி கட்டுவதற்காக, அயோத்தியின் முக்கிய இடத்தில் முஸ்லிம்களுக்கு, 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும்’ என, குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, வழக்கில் முன்பு சம்பந்தப்பட்டவர்களால் 9 சீராய்வு மனுக்களும், புதியவர்களால் 9 சீராய்வு மனுக்களுமாக மொத்தம் 18 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணையை, உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி பாப்டே தலைமையில், நீதிபதிகள் சந்திரசூட், அசோக் பூஷண், நசீர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று (டிச.,12) விசாரித்தது. இதில், தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 18 சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.