அமைச்சர்கள் மீது சொத்து குவிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் பாஜக சார்பில் கேவியட் மனு

தமிழக அமைச்சர்களுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பாஜக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழக அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த திமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்களாக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சிறப்பு நீதிமன்றங்கள், இந்த வழக்குகளில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்குகளில் சிறப்பு நீதிமன்றங்கள் பிறப்பித்த தீர்ப்புகளை மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தமிழக அமைச்சர்கள் தரப்பிலும், லஞ்சஒழிப்புத் துறை தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தங்களது தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் வழக்கறிஞர் நச்சிக்கேத்தா ஜோஷி கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.