அமளியில் ஈடுபடுவோரை வரலாறு நினைவில் வைத்திருக்காது: பிரதமர் மோடி

பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக பிரதமர் மோடி, அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும், அமளியில் ஈடுபடுவோரை வரலாறு நினைவில் வைத்திருக்காது என்றும் கூறினார்.

இடைக்கால பட்ஜெட்   (பிப்.,1) தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதற்காக இந்தாண்டின் முதல் பார்லி., கூட்டத்தொடர் இன்று ஜனாதிபதி உரையுடன் துவங்கியது. முன்னதாக பார்லி., வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மூலம் மகத்தான சாதனை படைக்கப்பட்டுள்ளது. குடியரசு தின விழா அணிவகுப்பில் பெண் சக்திகளின் வலிமை பறைசாற்றப்பட்டது. அதேபோல், இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையும், நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் தாக்கலும் உள்ளது.

பார்லி., விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். விவாதங்கள் தீவிரமாக இருக்கலாம். இடையூறு செய்யும் வகையில் இருக்கக்கூடாது. பார்லி.,யில் அமளியில் ஈடுபடுவோரை வரலாறு நினைவில் வைத்திருக்காது. கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தேர்தலில் வெற்றி பெற்று வந்த பின் பா.ஜ., அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.