புதுச்சேரியில் சீனிவாச திருக்கல்யாணம்

புதுச்சேரியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண உற்சவ திட்டம் மற்றும், புதுச்சேரி ஸ்ரீவாரி திருக்கல்யாண சேவா டிரஸ்ட் ஆகியவை இணைந்து வரும் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் ஸ்ரீவாரி சீனிவாச திருக்கல்யாணத்தை நடத்துகின்றனர். கடந்த 2016க்கு பிறகு மீண்டும் தற்போது திருக்கல்யாணம் நடக்கிறது. இனி ஆண்டுதோறும் திருக்கல்யாணம் நடத்தப்படும். இம்முறையும் திருமலையில் இருந்து உற்சவர் கொண்டு வரப்பட்டு திருமலையின் அர்ச்சகர்கள் கல்யாணத்தை நடத்தி வைக்கின்றனர். மாலை 4.15 மணி முதல் இரவு 9 மணிவரை இந்த நிகழ்ச்சி நடக்கும். லாஸ்பேட்டை விவேகானந்தா மேனிலைப்பள்ளி வளாகத்தில் வரும் 19ம் தேதி காலை சுப்ரபாதம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கும். இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். திருக்கல்யாண உற்சவத்துக்கு புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஹெலிபேடு மைதானத்துக்கு இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.