சலவைத் தொழிலாளி மகன் சிவில் நீதிபதியாக தேர்வு

காஞ்சிபுரம் சேக்குப்பேட்டைத் தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் கணேசன் – மேகலா தம்பதி. இவர்கள் தங்கள் வீட்டில் சலவை தொழில் செய்து வருகின்றனர். இவரது மகன் பாலாஜி. இவர் 2019-ல் வழக்கறிஞர் படிப்பை முடித்துள்ளார். அப்போதே சிவில் நீதிபதிக்கான தேர்வை எழுதினார். இதில் தேர்வாகவில்லை. பின்னர் காஞ்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சிவில் நீதிபதிக்கான முதல் நிலை தேர்வை எழுதினார். அதில் தேர்வான பாலாஜி முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வில் பங்கேற்றார். ஜனவரி 30-ல் இத்தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இவர் சிவில் நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.