மூன்றாவது மாநிலம் தமிழகம்

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அரசு மின்னணு சந்தையின் தலைமைச் செயல் அதிகாரி பி கே சிங், “ஜெம் எனப்படும் அரசு மின்னணு சந்தை மூலம் பஞ்சாயத்து அமைப்புகள் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. ஜெம் மூலமாக மேற்கொள்ளப்படும் மொத்த வணிகத்தில் 57 சதவீதம் சிறு தொழில்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் பதிவு செய்துள்ள 8 லட்சம் நிறுவனங்களில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் 4 லட்சம் ஆகும். ஜெம் சார்பில் நிகழும் நிதியாண்டில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜெம் அமைப்பை பஞ்சாயத்து அமைப்புகளுடன் ஒருங்கிணைத்ததன் மூலம் அடிமட்ட அளவில் பஞ்சாயத்து அமைப்புகள் ஆன்லைன் மூலம் பொருட்களை கொள்முதல் செய்ய வழிவகை ஏற்பட்டுள்ளது. இத்திட்டம் ஏற்கனவே ஹரியானா மாநிலம் குர்கான் மாவட்டங்களில் உள்ள பஞ்சாயத்துகளில் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இதனை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஜெம் இணையதளம் தொடங்கப்பட்டதில் இருந்து, இதுவரை மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் மூலம் ரூ. 2.83 லட்சம் கோடி மதிப்பிற்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு அமைப்புகளும் கொள்முதல் செய்வோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 46.5 லட்சம் பொருட்கள் மற்றும் 250 சேவைகள் இந்த இணையதளத்தில் கிடைக்கின்றன. இதன் மூலம், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு அமைப்புகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் கொள்முதல் செய்யும் மூன்றாவது பெரிய மாநிலமாக தமிழகம் உள்ளது. பாதுகாப்புத் துறையில் கடந்த ஆண்டு 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்துள்ள நிலையில் இந்தாண்டு 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.