பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டிக்கு எதிர்ப்பு

டெல்லியில் ஏ.என்.ஐ செய்தி நிறுவத்திற்கு பேட்டி அளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ‘பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அதனை ஜி.எஸ்.டி.க்கு கீழ் கொண்டு வருவதை செயல்படுத்த மகிழ்ச்சியுடன் மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஆனால் மாநில அரசுகள் அதனை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்பதுதான் உண்மை. சுமை பகிர்வு சமமாக இருக்க தேவையில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. அதேபோல், மாநில அரசுகளும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரிகளை குறைப்பது தொடர்பாக பொறுப்பேற்க வேண்டும். ரஷியா உக்ரைன் மோதல் எரிபொருள் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 19.56 அமெரிக்க டாலரிலிருந்து 130 டாலராக உயர்ந்தது. பெட்ரோல் டீசல் மீது மத்திய அரசு 32 ரூபாய் கலால் வரி விதித்தது. தீபாவளிக்கு முன்பு மத்திய அரசு அதனை குறைத்தது. விலைகள் குறைக்கப்பட்டன. எரிபொருள் மீது பா.ஜ.க ஆளும் மாநிலங்கள், பா.ஜ.க அல்லாத மாநிலங்களை விட பாதி அளவே வாட் வரியை வசூலிக்கின்றன. எனவே, பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் டீசல் சில்லறை விலை ரூ.15 முதல் ரூ. 20 வரை வித்தியாசம் உள்ளது’ என கூறினார்.