சட்டங்களுக்கு ஹிந்தி பெயர் பார்லிமென்ட் குழு ஒப்புதல்

‘கிரிமினல் சட்டங்களுக்கு மாற்றாக கொண்டு வரப்பட உள்ள மூன்று சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டதில், எந்த விதிமீறலும் இல்லை’ என, உள்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு தெரிவித்துள்ளது. இந்திய தண்டனை சட்டம் உட்பட மூன்று சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளன. இதற்கான மசோதாக்கள் லோக்சபாவில், ஆக., 11ல் தாக்கல் செய்யப்பட்டன.

இதன்படி, 1860ல் அறிமுகமான இந்திய தண்டனை சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா என்றும், 1898ல் அறிமுகமான குற்றவியல் நடைமுறைச் சட்டம், பாரதிய நாகரிக் சன்ஹிதா என்றும், 1872ல் அறிமுகமான இந்திய சாட்சிகள் சட்டம், பாரதிய சாக் ஷயா அதீனியம் என்றும் பெயர் மாற்றப்பட்டுள்ளன. இந்த சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கூறுகையில், ‘சட்டங்கள் ஆங்கிலத்தில் இருக்கும்போது, அதற்கான பெயரை ஹிந்தியில் வைப்பது ஏன்? இந்த சட்டங்களின் பெயர்களை உச்சரிப்பதில் சிரமம் உள்ளது’ என, அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த பெயர் மாற்றத்துக்கு, தி.மு.க., கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின், வலுக்கட்டாயமாக ஹிந்தி திணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

பா.ஜ., – எம்.பி.,யான பிரிஜ்லால் தலைமையிலான, உள்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு இது தொடர்பாக விசாரணை நடத்தி, தன் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த சட்டங்களுக்கு ஹிந்தி பெயர்கள் வைக்கப்பட்டதில் எந்த சட்ட விதிமீறல்களும் இல்லை. அரசியல் சாசனத்தின், 348வது பிரிவின்படி, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் பயன்படுத்தும் மொழியாக; சட்டங்கள், மசோதாக்கள் மற்றும் பிற சட்ட ஆவணங்களில் பயன்படுத்தும் மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும். தற்போது பெயர் மாற்றப்பட்டுள்ள சட்டங்கள் மற்றும் அதன் பெயர்கள் ஆங்கிலத்திலேயே எழுதப்படுகின்றன; ஹிந்தியில் எழுதப்படவில்லை.

இந்த சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் வைத்தாலும், அவை ஆங்கிலத்திலேயே எழுதப்படும். இதனால் எந்த சட்ட விதிமீறலும் இதில் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.