எங்கே நிம்மதி

ஒரு வாலிபனிடம் ஏராளமான பணம் இருந்தது. ஆனாலும், அவன் ஏதோ பிரச்னைகளில் சிக்கி தவித்துக் கொண்டே இருந்தான். வாழ்க்கையே வெறுத்துப்போனது.

ஒருமுறை அவனது தந்தையின் நண்பர் அவனது வீட்டுக்கு வந்தார். வாடிப்போன அவன் முகத்தைக் கண்டு “என்ன பிரச்னை..???’ என கேட்டார்.

அதற்கு அவன், ஐயா… நான் நிறைய சம்பாதிக்கிறேன், பொருளையெல்லாம் மனைவி, பிள்ளைகளுக்காக செலவழிக்கிறேன். ஆனால், அவர்கள் இன்னும்… இன்னும்… என்கிறார்களே தவிர இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்தபாடில்லை. என் நண்பர்களும் அப்படியே; நான் செலவழித்தால் உடன் வருகிறார்கள். இல்லாவிட்டால் ஓடி விடுகிறார்கள். எனக்கு வேலை செய்து செய்து அலுத்து விட்டது. நிம்மதியைத் தேடி அலைகிறேன்,” என்றான்.

பெரியவர் சிரித்தார். ”நீ கேட்கும் நிம்மதியான இடம் ஒன்றிருக்கிறது, வருகிறாயா..???”என்றார். அவனும் ஆர்வமாகப் புறப்பட்டான். அவர் அவனை சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்றார். அவன் அதிர்ந்தான். “பார்த்தாயா இளைஞனே…, இங்கே எரிந்து கொண்டிருப்பவர்களை… இவர்களுக்கு தங்கள் மீது நெருப்பு எரிவது கூட தெரியாமல் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். இறப்பு என்ற ஒன்று வரும் வரை உலகில் நிம்மதி என்பதே கிடைக்காது. வாழும் காலம் வரை பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். அதை துணிந்து ஏற்றுக்கொள். ஏற்றுக் கொள்ளுதல் முடித்ததும் கடவுள் உனக்கு நிரந்தர நிம்மதி தருவார்,” என்றார். அவன் மனத்தெளிவுடன் கிளம்பினான்.