ஆதிஷிக்கு பாஜக நோட்டீஸ்

கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லி அமைச்சர் ஆதிஷி கூறும்போது, “முதல்வர் கேஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான பிறகு, பாஜகவைச் சேர்ந்த ஒருவர் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, நானும் ஆம் ஆத்மியின் சில மூத்த தலைவர்களும் பாஜகவில் சேர வேண்டும் என வலியுறுத்தினார். அவ்வாறு சேராவிட்டால் எங்களை அமலாக்கத் துறை கைது செய்யும் என மிரட்டினார்” என்று குற்றம்சாட்டினார். இந்நிலையில், டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா நேற்று கூறும்போது, “பாஜகவில் சேர அழுத்தம் கொடுத்ததாக ஆதிஷி குற்றம்சாட்டி உள்ளார். இந்த விவகாரத்தில் விளக்கம் அளிப்பதுடன் ஆதாரத்தை வழங்க கோரி சட்ட ரீதியாக நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். 15 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.