நீங்கள் பாரதத்தின் தூதுவர்கள்

வெளிநாடு வாழ் பாரத மக்களுக்கான ’17வது பிரவாசி பாரதிய திவஸ்’ மாநாடு மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில், 2வது நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகையில், “வெளிநாடு வாழ் பாரத மக்களுக்கான இந்த ஆண்டு கருத்தரங்கம் பல வகைகளில் சிறப்பு பெற்றுள்ளது. சில மாதங்களுக்கு முன்புதான் நாம் நமது 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடினோம். இதையடுத்து அடுத்த 25 ஆண்டுகளுக்கான அமிர்த காலம் தொடங்கியுள்ளது. பாரதத்தின் உலகப் பார்வை தற்போது வலுப்பெற்றுள்ளது. பாரதம் ஓர் அறிவு மையமாக மட்டும் திகழவில்லை; திறமை மிக்க மனித வளத்திற்கான தலைநகராகவும் திகழ்கிறது. நமது பாரத இளைஞர்களின் திறன்கள், மதிப்பீடுகள், நேர்மை, கடமை உணர்வு ஆகியவை உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நமது நாட்டின் இந்தத் திறமை மிக்க மனித வளம், உலகின் வளர்ச்சி இயந்திரமாக மாறும். வெளிநாடுகளில் வாழும் பாரத மக்கள் அனைவருமே நமது நாட்டுக்கான தூதர்கள். நான் அவர்களை அவ்வாறு அழைக்கவே விரும்புகிறேன். நமது நாட்டின் ஒரு தூதராக உங்கள் பங்களிப்பு பல்வேறு வகைகளில் சிறப்பு பெற்றது. பாரதத்தில் தயாரிப்போம் எனும் அரசின் முன்னெடுப்புக்கான தூதர்கள் நீங்கள். அதுமட்டுமல்ல, யோகா, கைவினைப் பொருட்கள், சிறுதானியங்கள் ஆகியவற்றுக்கும் நீங்கள்தான் நமது நாட்டின் தூதர்கள். உலக நாடுகளால் பாரதம் இன்று நம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் பார்க்கப்படுகிறது. இன்று உலக அரங்கில் பாரதத்தின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. இந்த ஆண்டு ஜி20 அமைப்புக்கு பாரதம் தலைமை தாங்குகிறது. இந்த மாநாட்டை ஒரு தூதரக நிகழ்வாக மட்டும் நிகழ்த்த வேண்டும் என்று அரசு நினைக்கவில்லை. மக்கள் பங்கேற்கும் நிகழ்வாக இதை மாற்ற விரும்புகிறோம்” என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான், சூரினாம் நாட்டு அதிபர் சந்திரிகா பிரசாத் சந்தோகி, கயானா அதிபர் இர்பான் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், இந்நிகழ்ச்சியில், 17வது பிரவாசி பாரதிய திவஸ் மாநாட்டின் நினைவு தபால் தலையும் வெளியிடப்பட்டது.