சாபம் சும்மா விடுமா?

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான பேரறிவாளன் விடுதலை குறித்து கருத்துத் தெரிவித்த ஓய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் அனுசுயா, ‘ராஜிவ் கொலையை விசாரித்த உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், அவற்றில் செயப்பட்ட மேல்முறையீடுகளில்  பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் குற்றவாளிகள் என ஊர்ஜிதம் செய்யப்பட்டு அவர்களுக்கு துாக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது. பின், கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஆயுள் தண்டனை என்றால், ஆயுள் முடியும் வரை சிறையில் தான் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல், மனிதாபிமான அடிப்படையில், ராஜிவ் உள்ளிட்ட 16 பேரை கொன்று தீர்த்த பேரறிவாளனை நீதிமன்றம் விடுவிக்கும் என்றால் நீதிமன்ற நடைமுறையை எப்படி எடுத்து கொள்வது? ஒரு நீதிமன்றம், ஒரு வழக்கில் எத்தனை விதமான தீர்ப்புகளை வழங்க முடியும்? இன்றைக்கு பேரறிவாளனை விட்டவர்கள், அடுத்து அவரோடு சேர்ந்து கொலைகள் செய்த மேலும் ஆறு பேரையும் விடுவிப்பார்களா? அப்படியென்றால், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும் செய்தது தியாகமா? கோர்ட் பார்வையின்படி கோவையில் குண்டு வெடிப்பின் போது கைதான மற்றவர்களையும், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் கைதிகளுக்கும் இதே தீர்ப்பும், நீதியும் பொருந்துமா? எங்களை பொறுத்தவரை ராஜிவ் கொலையாளிகளுக்கு ஒரு நாளும் மன்னிப்பு கிடையாது. நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்யலாம். ஆனால், இந்த கொலை சம்பவத்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களும், ராஜிவ் ஆன்மாவும் ஒவ்வொரு நிமிடமும் விடும் சாபத்திலிருந்து கொலையாளிகள் தப்ப முடியாது’ என கூறினார். அனுசுயா, ராஜிவ் கொல்லப்பட்ட நேரத்தில் ஸ்ரீபெரும்புதுாரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு குண்டு வெடிப்பில் சிக்கி உயிர் பிழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.