எங்கே நிம்மதி?

ஒரு மனிதருக்கு எந்தக் குறையும் இல்லை, ஆனாலும் மனதில் நிம்மதி இல்லை. படுத்தால் தூக்கம் வரவில்லை, சிரமப்பட்டார். பக்கத்து காட்டில் உள்ள ஒர் ஆசிரமத்தில் உள்ள சுவாமிஜியை போய் பார்க்க யோசனை சொன்னார் அவரது மனைவி.

அவரும் சுவாமிஜியை சென்றுப் பார்த்தார். அவரிடம் தன் நிலையை விளக்கினான்.

சுவாமிஜி, “தம்பி… உன் நிலைமை எனக்குப் புரிகிறது. உன் மனதுக்குச் சில ரகசியங்கள் தெரியக்கூடாது. தெரிந்தால் உன் நிம்மதி போய்விடும். அது மட்டுமல்ல. மனம் தேவையில்லாத சமயங்களில் தேவையில்லாத சுமைகளைச் சுமப்பதும் இன்னொரு காரணம்!’ என்றார்

“நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை” என்றார் அந்த மனிதர்.

புரியவைக்கிறேன்…. அதற்கு முன் உணவு சாப்பிடு என்றார். சாப்பிட்ட பிறகு, சுவாமிஜி, படுக்கையைக் காட்டி, இதில் படுத்துக்கொள் என்றார். பக்கத்தில் உட்கார்ந்து கதை சொன்னார்.

கதை இதுதான்: ரயில் புறப்படப் போகிறது. அவசரமாக ஒருவன் ஓடி வந்து ஏறுகிறான் அவன் தலையில் ஒரு மூட்டை. ஒர் இடம் பிடித்து உட்கார்ந்தான். ரயில் புறப்பட்டது. தலையில் சுமந்த வந்த மூட்டையை மட்டும் அவன் கிழே இறக்கி வைக்கவில்லை. எதிரே இருந்தவர், “ஏம்ப்பா! எதுக்கு அந்த மூட்டையைச் சுமந்துக்கிட்டு வர்ரே? இறக்கி வையேன் என்கிறார். அந்த மனிதன், “வேணாங்க! ரயில் என்னை மட்டும் சுமந்தா போதும்! என் சுமையை நான் சுமந்துக்குவேன்!’ என்றான்.

சுவாமிஜி கதையை முடித்தார். படுத்திருந்த மனிதர் சிரித்தார். ‘பைத்தியக்காரனா இருக்கானே, ரயிலைவிட்டு இறங்கும்போது, மூட்டையைத் தூக்கிக்கொண்டு இறங்கினால் போதாதா? யார் அவன்? என கேட்டார் அவர்.

“நீதான்!”

என்ன சொல்றீங்க?

சுவாமிஜி சொன்னார்: “வாழ்க்கை என்பதும் ஒரு ரயில் பயணம் மாதிரிதான். பயணம் முழுவதும் சுமந்து கொண்டே போகிறவர்கள் நிம்மதியாக வாழமுடியாது. தேவைப்படுவதை மட்டும் மனதில் வைத்துக்கொள்!”

அவருக்கு தனது குறை புரிந்தது. சுகமாக தூங்கினார். கண் விழித்தபோது எதிரே நின்றிருந்த சுவாமிஜி, “எழுந்திரு அந்த தலையணையைத் தூக்கு!” என்றார். தூக்கிய அந்த மனிதர், அடுத்த கணம் “ஆ”வென்று அலறினார். தலையணையின் அடியில் ஒரு நாகப்பாம்பு சுருண்டு படுத்திருந்தது.

உன் தலைக்கு அருகில் ஒரு பாம்பு… அப்படி இருந்தும் நீ நிம்மதியாய் தூங்கினாய். பாம்பு பக்கத்தில் இருந்த ரகசியம் உன் மனதுக்குத் தெரியாது. அதனால் நிம்மதியாகத் தூங்கியிருக்கிறாய்!’ என கூறி நிம்மதி எங்கே இருக்கிறது என்பதை புரிந்து கொண்டாயா? என கேட்டார் சுவாமிஜி.

புரிந்தது கொண்டேன்! சுவாமி ஜி. அது மனதுக்குள்ள்தான் இருக்கிறது என்றார் அந்த மனிதர். ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார் சுவாமிஜி.