பாராட்டாவிட்டாலும் தூற்றாமல் இருப்போம்

காங்கிரஸ் தலைவர் சுமித்ரா குமாரி யாதவின் மகள் விசாகா யாதவ் உக்ரைனில் இருந்து வெளியேறி, ருமேனியா வழியாக மீட்கப்பட்டார். இது குறித்து அவர் கூறுகையில், ‘ருமேனியா, போலந்து போன்ற போரினால் பாதிக்கப்படாத நாடுகளில் இருந்து திரும்ப அழைத்து வருவதை யாரும் வெளியேற்றுவது என்று சொல்ல முடியாது. உக்ரைன் எல்லைகளுக்கு நாங்களாகவே வந்தோம்’  என கூறியுள்ளார். அதனை காங்கிரஸ் தலைவர் ராகுலும் மறு டுவீட் செய்துள்ளார். ஆனால், உக்ரைனில் போர் துவங்குவதற்கு முன்பாகவே பாரதத் தூதரகம் நாட்டை விட்டு வெளியேற கூறியது. போர் தொடங்கிய பின்னரும் உக்ரைனின் எல்லைப் பகுதிகளுக்கு செல்லவும், பாதுகாப்பு இடங்களில் வசிக்கவும் உரிய நேரத்தில் தகுந்த அறிவுரைகளை வழங்கி வந்தது. அனைத்து நாட்டு தூதரகங்களும் உக்ரைனைவிட்டு வெளியேறிய நிலையிலும் நமது குடிமக்களின் நன்மைக்காக பாரதத் தூதரகம் துணிந்து அங்கிருந்து செயல்பட்டு வருகிறது.  மேலும் இங்கிருந்து படிக்க செல்பவர்கள் அங்கு நடக்கும் அனைத்துக்கும் தாங்கள்தான் பொறுப்பு, சொந்த ரிஸ்க்கில்தான் செல்கிறோம் என ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட பிறகே செல்கிறார்கள். எனினும்கூட நமது மத்திய அரசு நமது வீட்டு பிள்ளைகளை காக்க பெருமுயற்சி எடுத்து வருகிறது. அதை பாராட்ட மனமில்லை என்றாலும் தூற்றாமலாவது இருப்போம்.