அறநிலையத்துறை அத்துமீறல்

சென்னை மாம்பலம் அயோத்தியா மண்டபத்திற்கு தமிழக அரசு திடீர் என பூட்டுப் போட்டதைப் போன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களிடையே புகழ் பெற்று ஹிந்து ஒற்றுமைப் பணியில் 137 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் வெள்ளிமலை பாலசுப்பிரமணியர் கோயில் ஆலய முன்னேற்ற சங்க கட்டடத்தை திடீரென தமிழக அரசு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலசுப்பிரமணியர் கோயில், ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஹிந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் இயங்கினாலும், பராமரிப்பு பணி, திருப்பணிகள் செய்வது ஆலய முன்னேற்ற சங்கம் தான். இக்கட்டடத்தை கட்ட, 2004ல், வருவாய் துறையும், அறநிலையத் துறையும் அனுமதி கொடுத்தன. இந்த கட்டடத்தை திறந்து வைத்ததே, அன்றைய கன்னியாகுமரி மாவட்ட ஹிந்து அறநிலைய துறை இணை ஆணையர்தான். கோயில் வருமானத்தை சுரண்டி சாப்பிட நினைக்கும் அதிகாரிகள், கட்டடத்துக்கு, ‘சீல்’ வைப்பதால் சங்கம் முடங்கி விடும் என நினைக்கின்றனர். என்ன நடந்தாலும் சரி, ஆலய முன்னேற்ற சங்கம் இயங்கும் என ஆலய முன்னேற்ற சங்க தலைவரும், வழக்கறிஞருமான சிவகுமார் கூறினார். மேலும், கட்டடம் இருப்பது தவறு என கூறும் அரசு, அருமாவிளை ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலுக்கு சொந்தமான இடத்தின் அருகில் உள்ள சர்ச்சுக்கு போக, சாலை அமைத்து கொடுக்கிறது என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.