விடுதலைப் புலிகளை உயிர்ப்பிக்க முயற்சி

கடந்த ஆண்டு லட்சத்தீவுகள் அருகே ஒரு படகை இந்திய கடலோரக் காவல் படையினர் சோதனை செய்தனர். அதில் துப்பாக்கிகள், தோட்டாக்கள், 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டது. படகில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள், பாகிஸ்தானில் இருந்து இவற்றை இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. இவர்கள் மீது என்.ஐ.ஏ வழக்குப் பதிவு செய்தது. மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உளவுப்பிரிவைச் சேர்ந்த சத்குணம் என்ற சபேசனை கடந்தாண்டு என்.ஐ.ஏ. கைது செய்தது. லெட்சுமணன் மேரி பிரான்ஸிகா என்ற பெண்ணும் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இவர்கள் போலி ஆவணங்களை உருவாக்கி அதனைக்கொண்டு இந்திய பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுள்ளனர். அவற்றின் மூலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பெரிய தொகையினை பெற்றுள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள் உருவாக்கம் செய்வது, தமிழகத்தில் தமிழ் தேசியம் என்ற பிரிவினையை வளர்ப்பது உள்ளிட்ட முயற்சிகளில் சில தமிழக அரசியல்வாதிகளின் துணையுடன் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையே, என்.ஐ.ஏ, இவ்வழக்கு சம்பந்தமாக லெட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா, கெனிஸ்டன் பெர்னாண்டோ, பாஸ்கரன், ஜான்சன் சாமுவேல், ஜி. தர்மேந்திரன், இ. மோகன் ஆகிய 6 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.