மூன்று தேசத்துரோகிகள் கைது

ஒடிசாவின் நாயகர் மற்றும் ஜாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.டி.ஐ ஆசிரியராகப் பணிபுரியும் பதானிசமந்த் லெங்கா, சரோஜ் குமார் நாயக் மற்றும் சௌமியா பட்டநாயக் ஆகிய மூன்று நபர்கள், மோசடியாக மற்றவர்களின் பெயர்களில் அதிக எண்ணிக்கையிலான சிம் கார்டுகளை வாங்கி, அவற்றின் ஓ.டி.பிக்கள் எனப்படும் ஒருமுறை கடவுச்சொற்களை உருவாக்கி அவற்றை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ, பி.ஐ.ஓ உள்ளிட்ட உளவாளிகள், சில குற்றவாளிகள், தேசவிரோத சக்திகள் மற்றும் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு விற்றனர். அதற்கு ஈடாக, பாரதத்தில் உள்ள சில பாகிஸ்தானிய முகவர்களால் அவர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது, அவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர். மேலும், இந்த செயல்முறையை பயன்படுத்தி வாட்ஸ்அப், டெலிகிராம், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், மின்னஞ்சல் கணக்குகளைத் திறப்பதற்கும் அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களிலும் பல்வேறு கணக்குகள் மற்றும் சேனல்களை உருவாக்கவும் இவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மூவரையும் ஒடிசா காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையினர் (எஸ்.டி.எப்) கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 19 அலைபேசிகள், 47 முன் செயல்படுத்தப்பட்ட சிம் கார்டுகள், 61 ஏ.டி.எம் கார்டுகள், 23 சிம் கவர்கள் மற்றும் மடிக்கணினிகள் என பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஓ.டி.பிகள் மூலம் பாகிஸ்தான் உளவாளிகள் பல மின்னஞ்சல், சமூக வலைதள கணக்குகள் தொடங்கியுள்ளனர். பாரத மக்களின் பெயர்களில் இந்த சிம்கார்டுகள் வாங்கப்பட்டுள்ளதால், இந்தக் கணக்குகள் பாரதத்தினரால் தொடங்கப்பட்டதாகவே மக்கள் கருதுவார்கள். இதைப் பயன்படுத்தி பாகிஸ்தான் உளவாளிகள் நாட்டை உளவு பார்க்கின்றனர். இதைத்தவிர, பல்வேறு பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கும், பாலியல் குற்றங்களுக்கும் இந்தக் கணக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.