காசி தமிழ் சங்கமத்தில் அரசியல் இல்லை

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, காசி தமிழ்நாடு வணிக பாடம் எனும் வர்த்தக இணைப்புக்கான ஒரு நாள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு வர்த்தக அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் சிறப்பு அழைப்பாளராக துக்ளக் ஆசிரியரும், ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தின் காஞ்சிப்பட்டு எந்த அளவுக்கு பிரபலமாகி வளர்ச்சியை எட்டியுள்ளதோ அந்த அளவுக்கான பிரதிபலிப்பை பனாரஸ் (காசி) பட்டில் காண முடிகிறது. பாரதம் ஆன்மிகத்தால் மட்டும் பிணைக்கப்பட்ட நாடு அல்ல, அது கலாச்சாரத்தால், வர்த்தகத்தால், பழக்க வழக்கங்களால், போக்குவரத்தால் பிணைக்கப்பட்ட ஒரு நாடு. இந்த தன்மையை மனதில் கொண்டு ‘கங்கை நதிப்புரத்து கோதுமை பண்டம், காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்’ என்று அப்போதே பாரதியார் பாடினார். காசி தமிழ் சங்கமத்தில் அரசியல் இல்லை, ஆன்மிகம் இருக்கிறது, தொன்மையான கலாசாரத்துடன் நாட்டை காசி பிணைத்திருப்பதால் தமிழகத்தைச் சேர்ந்த பலரும் காசிக்கு வர வேண்டும் என்று விரும்புவது இயற்கையே. இந்த விருப்பத்தை நிறைவேற்ற மிக குறுகிய காலத்தில் மிகச்சிறப்பாக காசி தமிழ் சங்கமம் நிகழ்வை திட்டமிட்டு செயல்படுத்தி இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுக்குரியவர்” என்று கூறினார்.A