தமிழகத்தை பிரிக்கும் திட்டம் இல்லை

தி.மு.க பதவி ஏற்றது முதல் மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை குறித்து கேள்வி எழுப்பியபோது அப்படிதான் சொல்வோம் என திமிராகவும் கூறியது தி.மு.க. இந்நிலையில், பா.ஜ.கவை சேர்ந்த எல்.முருகன் சமீபத்தில் மத்திய இணை அமைச்சராக பதவி ஏற்றபோது, தனது சமூக ஊடகப் பதிவில் ‘கொங்கு நாடு’ என்று குறிப்பிட்டார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, நீலகிரி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை பிரித்து தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க திட்டமிடப்படுவதாக தகவல்கள் வெளியானது. தமிழகத்தை பிரிக்க சதி என தி.மு.க புலம்பித் தள்ளியது. அப்பதிவு ‘ஒரு அச்சுப்பிழை’ என எல்.முருகன் கூறிய பிறகே சமாதானமானது. இது தொடர்பாக மக்களவையில் எம்.பி.,க்கள் பாரிவேந்தர், ராமலிங்கம் ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதற்கு உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் அளித்த பதிலில், ‘தமிழகத்தை இரண்டாக பிரிக்க எந்த கோரிக்கையம் வரவில்லை. அதுபோல், எந்த கோரிக்கையும் பரிசீலனையில் இல்லை’ என்று கூறியுள்ளார்.