ராகுல் யாத்திரையின் உண்மை நோக்கம்

காங்கிரஸ் கட்சியின் நட்பு ஊடகவியலாளரும் ‘ஜி ஃபைல்ஸ்’ ஆசிரியருமான அனில் தியாகி, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை குறித்து ‘சத்ய ஹிந்தி’ என்ற யூடியூப் சேனலில் 1 மணிநேர நிகழ்ச்சியில் பேசியபோது, ராகுல் காந்தியின் இந்த யாத்திரை, வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் பாரதத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டது என்று யாத்திரையின் உண்மை நோக்கத்தை போட்டுடைத்துள்ளார்.

நிகழ்ச்சி தொடங்கிய சுமார் 6:40 நிமிடத்தில் பேசிய அவர், “ராகுல் காந்தி ஏன் தனது பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கினார், அவர் பயந்தாரா? அவர் ஏன் இவ்வளவு துணிச்சலான பணியை மேற்கொண்டார்?” என்று தானே கள்வி கேட்டு அதற்கு தானே பதில் அளித்த அனில் தியாகி, “நான் ஒரு முக்கியமான செய்தியைப் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். செப்டம்பர் 2022க்கு முன்பே (யாத்திரை தொடங்கும் போது), பாரதத்தில் நாசிசத்தின் மறு அவதாரம் குறித்து வெளிநாட்டு சக்திகள் மத்தியில் கவலை அதிகரித்து வருகிறது. அவர்கள் (வெளிநாட்டு சக்திகள்) பாரதத்தில் நாசிசத்தின் எழுச்சியைத் தடுக்க விரும்பினர். நாட்டில் அந்தப் பணியைச் செய்யக்கூடிய மனிதர் யார்? அவர் வேறு யாருமல்ல, ஒரு பெரிய கட்சியின் (இந்திய தேசிய காங்கிரஸ்) தலைவர் ராகுல் காந்தி. அவருக்கு பல்வேறு மாநிலங்களில் 40 எம்.பி.க்கள் மற்றும் பல எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதைவிட சிறந்த மாற்று எதுவும் இல்லை.

ராகுல் காந்தியால் அச்சத்தின் காரணி மற்றும் உலக சக்திகளின் கவலைகளை முன்னிலைப்படுத்த முடியவில்லை. உங்கள் சேனலில் நான் சில முக்கிய செய்திகளை வெளியிடுகிறேன். கடந்த 4 மாதங்களில், பாரதத்தில் ஆட்சி மாற்றத்தை ஆதரிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்துள்ளனர். அந்த வெளிநாட்டு முகவர்கள் பாரதத்தில் ஆட்சி மாற்றத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால்தான் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை முக்கியத்துவம் பெறுகிறது. அவர் காஷ்மீருக்குச் சென்று மூவர்ணக் கொடியை ஏற்றுவாரா இல்லையா என்பது முக்கியமல்ல. ராகுல் 3,400 கிலோமீட்டர் நடைப்பயணத்தை மேற்கொண்டார் மற்றும் (வெளிநாட்டு சக்திகளின்) நோக்கத்தை நிறைவு செய்தார். அவர் என்ன செய்ய விரும்பினார் என்பதை அவர் வெற்றிகரமாகத் தெரிவித்திருக்கிறார்” என்று தெரிவித்தார்.