கோயிலை காணவில்லை

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் காவல்துறை ஐ.ஜி.யும் உலக சிவனடியார்கள் திருக் கூட்டத்தின் மாநில ஆலோசகருமான பொன் மாணிக்கவேல், கன்யாகுமரி பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர்21வது சக்தி பீடமான பாலசௌந்தரி என்ற பத்திரகாளியம்மன் கோயில், சன்னதி தெருவில் அமைந்துள்ள 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய விஸ்வநாதர் கோயில், கன்னியாகுமரி ரயில்நிலைய சந்திப்பில் அமைந்துள்ள குகநாதீஸ்வரர் கோயில், கீழரதி வீதயில் அமைந்துள்ள சிவன்கோயில், விவேகனந்தபுரம் சந்திப்பில் அமைந்துள்ள சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோயில் ஆகிய கோயில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். இந்த கோயில்களில் உள்ள சுவாமி சிலைகள், கல் மண்டபங்கள், சிற்பங்கள், ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், தெரிசனங்கோப்பு உலகநாயகி அம்மன் சமேத ராகேஸ்வரர் கோயில், ஒழுகினைசேரி சோழராஜா கோயில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் ஆகிய கோயில்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “கன்னியாகுமரியில் 1,005 ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜசோழன் இறந்த பிறகு 3வது வருடத்தில் அவரது வாரிசான ராஜேந்திர சோழனால் புவன நந்தீஸ்வரர் கோயில் கட்டப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அந்தக் கோயிலை தேடி நான் இங்கு வந்தேன். ஆனால் நான் பல இடங்களில் தேடி பார்த்தும் அப்படி ஒரு கோயில் இங்கு இருந்ததை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த கோயிலை காணவில்லை” என்று கூறினார்.