மதமாற்றம் செய்யும் ஹிஸ்ப் உத் தஹ்ரிர்

சர்வதேச அளவில் செயல்படும் ஹிஸ்ப் உத் தஹ்ரிர் (ஹெச்.யு.டி) என்ற முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்கு 16 நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு மத்தியப் பிரதேசத்தில் செயல்பட்டு வருகிறது, அதனுடன் தொடர்புடையவர்கள் ஹைதராபாத்தில் தங்கியுள்ளனர் என மத்திய உளவு அமைப்புகள், மாநில அரசுகளுக்கு தகவல் அனுப்பியது. அதன் அடிப்படையில், மத்தியப் பிரதேச பயங்கரவாத தடுப்புப் படையினர் (ஏ.டி.எஸ்), மத்திய உளவுத் துறை மற்றும் தெலங்கானா காவல்துறையினர் உதவியுடன் ஹைதராபாத்தில் தங்கியிருந்த அந்த அமைப்பை சேர்ந்த 16 பேரை கடந்த 9ம் தேதி கைது செய்தனர். இவர்களில் 11 பேர் போபாலைச் சேர்ந்தவர்கள். 5 பேர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், எஸ்.யு.டி அமைப்பினர் மதமாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் ஹிந்துக்களாக இருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறியவர்கள். இவர்கள் ஹிந்து மதத்தைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட முகமது சலீம் என்பவரின் உண்மையான பெயர் சௌரவ் பரத்வாஜ். அப்துர் ரஹ்மான் என்பவரின் உண்மையான பெயர் தேவி பிரசாத் பாண்டே. முகமது சலீம், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியின் சகோதரர் அக்பருதீன் ஒவைசி நடத்தி வரும் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், “கைது செய்யப்பட்ட நபர்கள் உடற்பயிற்சி மைய ஊழியராகவும், ஆட்டோ ஓட்டுநராகவும், டெய்லராகவும் பணிபுரிந்து கொண்டே மதமாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். தங்களிடம் வருபவர்களை மூளைச் சலவை செய்து அவர்களை முஸ்லிம் மதத்துக்கு மாற்றுவதுதான் இவர்களுடைய நோக்கம். மத்தியப் பிரதேசத்தில் கேரளா ஸ்டோரி போன்ற சம்பவம் நடைபெற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என கூறினார்.