பா.ஜ.கவினர் உண்ணாவிரதம்

பா.ஜ.கவை சேர்ந்த தமிழக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் தர்மராஜ் ஆகியோர் நாகர்கோவிலில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் 1982ல் நடந்த மதக் கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அமைக்கப்பட்ட வேணுகோபால் கமிஷன், ஒரு வழிபாட்டுத் தலத்தின் அருகே, இன்னொரு வழிபாட்டுத் தலம் அமைக்கக் கூடாது என்று கூறியுள்ளது.ஆனால், தமிழக அமைச்சர் மனோ தங்கராஜின் வற்புறுத்தலால், வேணுகோபால் கமிஷனை மீறி புதிதாக 54 சர்ச்கள் கட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.இது கண்டனத்துக்குரியது. வேணுகோபால் கமிஷன் பரிந்துரையை மீறி, கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்த முதல்வர் ஸ்டாலின் மற்றும் தலைமைச் செயலாளரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம். ஆனால், இதுவரை பதில் வரவில்லை. எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி வரும் டிசம்பர் 11ம் தேதி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எம்.ஆர்.காந்தி தலைமையில் பா.ஜ.க. சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். இதில், மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அனைத்து சமூக உறுப்பினர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.மாவட்ட நிர்வாகம் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் இதில் எந்த சம்பந்தமும் இல்லாத அமைச்சரின் மகனும் கலந்து கொண்டுள்ளார்.இது கண்டிக்கத்தக்கது.இது போன்ற செயல்களை மாவட்ட நிர்வாகம் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினர்.